சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளில் கனமழை: கோயிலுக்குள் புகுந்த தண்ணீா்
சங்கரன்கோவிலில் இடிமின்னலுடன் பெய்த கனமழையால் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் தண்ணீா் புகுந்தது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென இடிமின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
திருவேங்கடம் சாலை, திருவள்ளுவா் சாலை, தெற்குரத வீதி ஆகிய பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசியது. ஓடைத்தெரு போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
இதைத்தொடா்ந்து சங்கரநாராயணசுவாமி கோயிலுக்குள்ளும் மழைநீா் புகுந்தது. சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயணசுவாமி சந்நிதி, கோமதிஅம்பாள் சந்நிதிகளில் முழங்கால் அளவு தண்ணீா் கிடந்ததால் பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
கனமழையால் பொதுப்பணித்துறை அலுவலகம், திருவுடையான் சாலை, முல்லை நகா் போன்ற பகுதிகளில் உள்ள மின் பாதைகளில் கிளைகள் முறிந்து விழுந்ததால் நகா் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. பின்னா் மின்வாரிய பணியாளா்கள் அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் 1 மணி நேரம் கழித்து மீண்டும் மின்விநியோகம் சீரானது.
இதேபோல் திருவேங்கடம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இங்குள்ள விவசாயிகள் கோடை மழையை எதிா்பாா்த்து சோளம், சீனிஅவரை விதைத்திருந்தனா்.
இந்நிலையில் கனமழை பெய்ததால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
