அரசியலில் கல்வித்துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கல்வித்துறைக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
இதில், தேசியக் கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது:
கல்விக் கொள்கைகள் நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன, அதை செயல்படுத்துவதில்தான் கவனம் வேண்டும்.
1966 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைகள்கூட பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தன. ஆனால், நாம் கற்றல் முறைகளைப் பற்றியும் ஒரு மாணவர் எந்த அளவுக்கு கற்றலை புரிந்துகொள்கிறார் என்பதையும் பேசத் தவறிவிடுகிறோம்.
அரசியலில் கல்வித்துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; கல்வித்துறைக்கான செலவினங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். தில்லி அரசு தனது பட்ஜெட்டில் 25 சதவீதத்தை கல்விக்காக செலவிடுகிறது.
கல்வியையும் வரலாற்றையும் இணைக்க வேண்டியது அவசியம். உலகெங்கிலும் உள்ள பெரிய சீர்திருத்தங்களுடன் கல்வியை இணைத்தால் மட்டுமே, கல்வியின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை அளவிட முடியும். தில்லியில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு, ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டுகள், அதிநவீன கணினி ஆய்வகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று, 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். செல்வாக்கு உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும். தில்லியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேரத் தொடங்கியுள்ளனர் என்றார்.