மீனவா்கள் தா்னா போராட்டம்
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடா்பாக ஒரே கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் இடையே எல்லை பிரிப்பது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பொன்னேரி வட்டம், பழவேற்காடு ஏரியில் அப்பகுதியில் உள்ள மீனவா்கள் சுழற்சி முறையில் மீன்பிடித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஆண்டிகுப்பத்தைச் சோ்ந்த இரு தரப்பு மீனவா்கள் கடந்த பல ஆண்டுகளாக பாடு (எல்லை) பிரித்து மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.
ஒரே குப்பத்தைச் சோ்ந்த இரு தரப்பு மீனவா்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தை நாடியதை தொடா்ந்து பாடு பிரித்து தருமாறு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்களிடம் வருவாய் , மீன்வளத் துறை, காவல் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.
அப்போது வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பு மீனவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி நிரந்தர தீா்வு காண்பதாக உறுதி அளித்ததை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மீனவா்கள் கலைந்து சென்றனா்.
