அரசுத் துறை, அரசு நிறுவனங்கள் தங்களுடைய ஆண்டு கொள்முதலில் 25 சதவீதத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கட்டாயமாக கொள்முதல் செய்ய வழிவகை செய்யும் சட்டம் பிறப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மூலம் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய தொழிலையும் மேம்படுத்தும் நோக்கில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் மூலம் அரசுத் துறைகள், அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் பொருள்கள், மூலப் பொருள்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யும்போது தங்களுடைய ஆண்டு மொத்த கொள்முதலில் 25 சதவீதத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரிடம் இருந்து கொள்முதல் செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, முதலில் 20 சதவீதம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கும் கோரிக்கையாக இருந்தது. பிறகு கட்டாயமாக கொள்முதல் செய்ய வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. பிறகு 20 சதவீதம் என்பது 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த 25 சதவீதத்தில் 3 சதவீதம் மகளிர் தொழில் முனைவோரிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென்று வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தனி இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த இணைய தளத்தின் மூலம் தங்களுடைய பொருள்களை விற்பனை செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். என்னென்ன பொருள்களை கொள்முதல் செய்யலாம் என்ற பட்டியல் சம்பந்தப்பட்ட அரசுத் துறை நிறுவனங்கள், அவை கொள்முதல் செய்வதற்கான பட்டியல் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: https://sambandh.msme.gov.in.