பரஸ்பர நிதி முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 5.72 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
பரஸ்பர நிதி துறையில், சில்லறை மற்றும் அதிக சொத்து மதிப்பைக் கொண்ட முதலீட்டாளர்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதன் காரணமாக, கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாகவே பரஸ்பர நிதி முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரசாரங்களால் சிறிய நகரங்களில் கூட பரஸ்பர நிதி திட்டங்களுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.
பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பின் புள்ளிவிவரப்படி நடப்பில் உள்ள 42 பரஸ்பர நிதி நிறுவனங்களில் தொடங்கப்பட்ட முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை முதல் முறையாக மே மாத இறுதி நிலவரப்படி 5,71,90,112 என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
மார்ச் மாத இறுதியில் இது 5,53,99,631-ஆக இருந்தது. ஆக, ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் பரஸ்பர நிதி முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 17.90 லட்சம் அதிகரித்துள்ளது.
பரஸ்பர நிதி திட்டங்களில் சென்ற 2016-17 நிதி ஆண்டில் 77 லட்சம் கணக்குகளும், 2015-16 நிதி ஆண்டில் 59 லட்சம் கணக்குகளும் புதிதாக தொடங்கப்பட்டன.
பங்குகள்-பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டங்கள் மற்றும் பேலன்ஸ்டு பண்டு ஆகியவற்றில் இணைந்துள்ள முதலீட்டாளர்கள் கணக்குகளின் எண்ணிக்கை மே மாத இறுதி நிலவரப்படி 4.60 கோடியாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாத இறுதியில் இது 4.4 கோடியாக காணப்பட்டது.
பரஸ்பர நிதி துறை நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துமதிப்பு தற்போதைய நிலையில் ரூ.19 லட்சம் கோடியாக உள்ளது. கிடைத்து வரும் வரவேற்பையடுத்து நடப்பு நிதி ஆண்டில் இந்த சொத்து மதிப்பு ரூ.20 லட்சம் கோடியைத் தாண்டும் என்று இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதனை பங்குகள், கடன்பத்திரங்கள், நிதி சந்தை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.