

மத்திய அரசு 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களின் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்க வேண்டும் என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் வினோத் கே. தாசரி வியாழக்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமையான வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இதனால், சுற்றுச்சூழல் மாசுபாடு மிகவும் அதிகரித்து வருகிறது.
வாகனங்கள் மூலமாக மாசுபாடு ஏற்படுவதை தடுக்க மோட்டார் வாகனத் தயாரிப்பு துறை பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு மாறும் வகையில் தீவிரமாக செயலாற்றி வருகிறோம்.
இந்த நிலையில், மத்திய அரசு 15 ஆண்டுகள் பழைமையான வாகன பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் காற்று மாசுபாடு பெருமளவு குறையும்.
மேலும், மோட்டார் வாகனத் துறையின் வடிவமைப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய வாகன வாரியத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு இது உதவியாக இருக்கும்.
வளர்ந்த நாடுகளில் மோட்டார் வாகன துறை வலுவாக உள்ளது. நாட்டின் தயாரிப்புத் துறையில் மோட்டார் வாகனத் துறையின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ள நிலையில், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்தத் துறையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.