இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மந்த நிலை நிலவியதையடுத்து, சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிவைக் கண்டது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்க அதிகரிப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஆகியவை பங்கு வர்த்தகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. பிப்ரவரி மாதத்துக்கான பங்கு முன்பேர கணக்கு முடிப்பையொட்டியும் பங்கு சந்தைகளில் வர்த்தகம் மந்த கதியாகவே இருந்தது.
உலக நிலவரங்களைப் பொருத்த வரையில் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்பட தொய்வு நிலை மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் ஆகியவை இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை. பல்வேறு சிக்கலான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்யப்பட்டதையடுத்து, எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 1.46 சதவீதமும், மின்சாரம் 1.11 சதவீதமும் சரிந்தன.
அதேசமயம், வங்கி துறை குறியீட்டெண் சரிவிலிருந்து தப்பி 0.13 சதவீதம் ஏற்றமடைந்தது. நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாக்டர் ரெட்டீஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 2.19 சதவீதமும், அதனைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி பங்கின் விலை 2.05 சதவீதமும் குறைந்தன.
மோசடி புகாரில் சிக்கியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை 2.09 சதவீதமும், கீதாஞ்சலி ஜெம்ஸ் 5 சதவீதமும் வீழ்ச்சி கண்டன.
அதேசமயம், ஸன் பார்மா, அதானி போர்ட்ஸ், கோட்டக் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா, யெஸ் வங்கி, இன்ஃபோசிஸ், எல் அண்டு டி, கோல் இந்தியா ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்ததால், பங்குச் சந்தை பெரும் சரிவிலிருந்து தப்பியது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிந்து 33,819 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 14 புள்ளிகள் குறைந்து 10,382 புள்ளிகளில் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.