சீனாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன்களுடன் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சீனா மற்றும் உலக நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 806 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பல நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. அதற்கான சிகிச்சை முறைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஐபோன்கள் மட்டுமின்றி, முகக்கவசம் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸுக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம். தற்போது முகக்கவசம் தேவை அதிகமாக இருப்பதால் அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். சோதனை முயற்சியில் வெற்றி பெற்றதையடுத்து, சான்றிதழ் பெற விண்ணப்பிக்கிறோம். பிப்ரவரி இறுதிக்குள் 20 மில்லியன் முகக்கவசங்களை தயாரிக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஏற்கெனவே சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மருத்துவப் பொருட்களை நன்கொடைகளாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அறுவை சிகிச்சை முகக்கவசங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் ஆகியவையும் தயாரிக்க இருக்கிறோம்.
விரைவில் இந்த பொருட்களின் விநியோகம் செய்யப்படும். இந்த கடின காலத்தை நாம் விரைவில் கடப்போம்' என்று ஃபாக்ஸ்கான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.