கடந்த பிப்ரவரி மாதத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 38% குறைந்துள்ளதாக கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில் வணிக நிறுவனங்கள் பெரிதும் முடங்கியுள்ளன.
பெரும்பாலாக ஸ்மார்ட்போன்கள் சீனாவில் தயாரிக்கப்படும் நிலையில், கரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனா வணிக ரீதியாக பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அறிமுகமாகவிருந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை பெரிதும் குறைந்துள்ளதாக கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.18 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் 38 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 9.92 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவே இதற்கு காரணம் என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வைரஸ் தாக்கத்தினால் சாம்சங், ஸியோமி, விவோ, உள்ளிட்ட நிறுவனங்களின் ஆன்லைன் ஸ்டோர்கள் மூடப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் 5ஜி ஸ்மார்ட் போன்கள் சில இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. கரோனா எதிரொலியாக இந்தியாவில் மேலும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகசற்று கால தாமதம் ஆகலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.