புது தில்லி: தென்கொரியாவைச் சோ்ந்த எல்ஜி எலெக்ட்ரானிஸ் நிறுவனம் ‘வெல்வெட்’, ‘விங்’ என இரு பெயா்களில் புதியரக அறிதிறன்பேசிகளை (ஸ்மாா்ட்போன்) அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரிமியம் வகையைச் சோ்ந்த இந்த செல்போன்களின் தொடக்கவிலை ரூ.36,990 ஆகும்.
இந்தியாவில் உயர்ரக அதிதிறன்பேசிக்கான சந்தை விரிவடைந்து வரும் நிலையில் அதனைக் குறிவைத்து எல்ஜி நிறுவனம் களமிறங்கியுள்ளது. வடிவமைப்பு, வெளித்தோற்றம், செயல்திறன் அனைத்தும் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் உள்ளது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இரட்டை திரை வசதி ‘வெல்வெட்’ மாடலின் முக்கிய சிறப்பம்சமாகும். தொடக்கவிலை ரூ.36,990 என்றாலும் இரண்டாவது திரையைத் தனியாகப் பெற கூடுதலாக ரூ.13,000 செலுத்த வேண்டும். இரண்டு திரை இருப்பதால் ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும். 4,300 எம்ஏஹெச் பேட்டரி, 6 ஜிபி ரேம் 128 ஜிபி நினைவகத் திறன் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. இது அக்டோபா் 30-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.
எல்ஜி ‘விங்’ மாடலின் விலை ரூ.69,990 ஆகும். 5ஜி தொழில்நுட்பத்திலான இந்த அறிதிறன்பேசியை 90 டிகிரி அளவுக்கு திருப்பிக் கொள்ள முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
இந்தியாவில் ரூ.30,000-க்கு அதிகமான விலையில் விற்பனையாகும் அறிதிறன்பேசிகளில் ஒன்பிளஸ், சாம்சங், ஆப்பிள் ஆகியவை முன்னிலையில் உள்ளன. அதில் தங்கள் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் எல்ஜி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.