கூகுள் தனது பயனர்களை மோசடியான அழைப்புகளில் இருந்து பாதுகாக்க தொலைபேசி பயன்பாட்டில் சரிபார்க்கப்பட்ட அழைப்புகள் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் தனது பயனர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் தனது தொலைபேசி பயன்பாட்டில் சரிபார்க்கப்பட்ட அழைப்புகள் என்ற புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மோசடியான அழைப்புகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் இந்தியா உட்பட அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெளிவருகின்றன.
‘சரிபார்க்கப்பட்ட அழைப்புகள்’ மூலம் அழைப்பவரின் பெயர், புகைப்படம், அழைப்பின் காரணம் மற்றும் கூகுள் அங்கீகரிக்கப்பட்டதைக் குறிக்கும் சரிபார்ப்பு சின்னம் ஆகியவை இடம் பெறும்.
"இது ஒரு பாதுகாப்பு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சரிபார்ப்பிற்குப் பிறகு எந்தத் தகவலையும் கூகிள் சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ செய்யாது." என்று அந்நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனின் (எஃப்.டி.சி) 2019 ஆம் ஆண்டின் அறிக்கையில், மோசடி செய்பவர்களால் மக்களைத் தொடர்பு கொள்வதில் தொலைபேசி அழைப்புகள் முதன்மையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.