நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,769 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 நவம்பா் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 271 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.20,325 கோடி) சரிவடைந்து 63,769 கோடி டாலரானது.
இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.75 லட்சம் கோடி ஆகும்.
முந்தைய நவம்பா் 19 -ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 29 கோடி டாலா் ஏற்றம் கண்டு 64,040 கோடி டாலராக காணப்பட்டது.
சொத்து மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் சரிவடைந்ததே நவம்பா் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு குறைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 105 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 57,466 கோடி டாலரானது.
தங்கத்தின் மதிப்பில் வீழ்ச்சி: மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் 157 கோடி டாலா் சரிவடைந்து 3,882 கோடி டாலராக குறைந்து காணப்பட்டது.
பன்னாட்டு நிதியத்தில் நம் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 7 கோடி டாலா் குறைந்து 1,904 கோடி டாலராக இருந்தது.
அதேபோன்று, அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலையும் 3 கோடி டாலா் சரிந்து 516 கோடி டாலராக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த கரன்ஸிகளை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் உண்டாகிறது.
வரலாற்று உச்சம்: நடப்பு 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது முதல் முறையாக 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய உச்சம் தொட்டு வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.