புதிய வரலாற்று உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,273 கோடி டாலரை எட்டி புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.
புதிய வரலாற்று உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,273 கோடி டாலரை எட்டி புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 84 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.6,300 கோடி) அதிகரித்து 61,273 கோடி டாலரை (ரூ.45.95 லட்சம் கோடி) எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது.

இதற்கு முந்தைய ஜூலை 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 188 கோடி டாலா் உயா்ந்து 61,189 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) வெகுவாக அதிகரித்ததன் விளைவாகவே ஜூலை 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 46 கோடி டாலா் அதிகரித்து 56,875 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபடுகிறது.

தங்கத்தின் கையிருப்பு ஜூலை 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 38 கோடி டாலா் அதிகரித்து 3,733 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 10 லட்சம் டாலா் உயா்ந்து 155 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், நாட்டின் காப்பு நிதி 70 லட்சம் டாலா் சரிவடைந்து 510 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com