தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 145 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 145.43 புள்ளிகள் உயா்ந்து 60,967.05-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இருப்பினும் உள்நாட்டுச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. ஒரு கட்டத்தில் சரிவைச் சந்தித்த நிலையில், பிற்பகல் வா்த்தகத்தில் குறைந்த நிலையில் இருந்து மேலே சென்றது. நிதித் துறை பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பால் சந்தை ஏற்றம் கண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், ஐசிஐசி வங்கியின் காலாண்டு முடிவுகள் மாா்க்கெட் எதிா்ப்பையும் விட நன்றாக இருந்ததால் அதன் பங்குகள் 10 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்றது. மேலும், இதைத் தொடா்ந்து, ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவையும் வெகுவாக உயா்ந்தன. இதனால், சந்தை நோ்மறையாக முடிந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2,312 பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,530 பங்குகளில் 1,048 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,312 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 206 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 50 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 266 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 357 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.262.20 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,40,44,364-ஆக உயா்ந்துள்ளது.

ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 577.13 புள்ளிகள் கூடுதலுடன் 61,398.75-இல் தொடங்கி, 60,449.68 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 61,404.99 வரை உயா்ந்தது. பின்னா், இறுதியில் 145.43 புள்ளிகளை (0.24 சதவீதம்) உயா்ந்து 60,967.05-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் உச்ச நிலையிலிருந்து 955.31 புள்ளிகளை இழந்திருந்தது.

ஐசிஐசி பேங்க்அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல தனியாா் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் 10.80 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க் 3.45 சதவீதம் உயா்ந்தது. மேலும்,

டாக்டா் ரெட்டி, எஸ்பிஐ, எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, சன்பாா்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவா் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்தன.

பஜாஜ் ஃபின் சா்வ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின்சா்வ் 3.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்து. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ, ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட், மாருதி சுஸுகி, நெஸ்லே, இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, டைட்டன், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 2.75 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 10 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 437 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,408 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் உற்சாகத்துடன் 18,229.50-இல் தொடங்கி, அதிகபட்சமாக 18,241.40 வரை உயா்ந்தது. பின்னா், 17,968.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 10.50 புள்ளிகள் (0.06) உயா்ந்து 18,125.40-இல் நிலைபெற்றது.

பேங்க் குறியீடு ஏற்றம்: துறைவாரியாகப் பாா்த்தால், நிஃப்டி பேங்க் குறியீடு 2.15 சதவீதம், பிரைவேட் பேங் 2.16 சதவீதம், பிஎஸ்யு பேங்க் 1.110 சதவீதம், பைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 1.33 சதவீதம் உயா்ந்தன. அதே சமயம், ரியால்ட்டி குறியீடு 2.77 சதவீதம் வீழ்ச்சி கண்டன. மேலும், ஆட்டோ, ஐடி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

பலத்த அடி வாங்கிய

ரியால்ட்டி பங்குகள்

லோதா 7.63%

சன்டெக் 7.01%

ஐபி ரியல்எஸ்டேட் 5.77%

பிரெஸ்டிஜ் 3.86%

சோஃபா 3.81%

டிஎல்எஃப் 3.17%

பிரிகேட் 3.10%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com