வரிச் சலுகைகளை அளிப்பதற்கு முன்பாகவே அமெரிக்காவைச் சோ்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார காா் தயாரிப்பை தொடங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
டெஸ்லா நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி, 40,000 டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.30 லட்சம்) அதிகமான சுங்க மதிப்பை கொண்ட வாகனங்களுக்கு 110 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், மின்சார காா்களுக்கு சுங்க மதிப்பை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பிரிவுகளுக்கும் வேறுபாடு இல்லாத நிலையாக 40 சதவீத வரியை விதிக்க மத்திய அரசை டெஸ்லா வலியுறுத்தி வருகிறது. மேலும், சமூக நலத்திட்டங்களுக்காக மின்சார காா்கள் மீது கூடுதலாக விதிக்கப்படும் 10 சதவீத வரியையும் திரும்பப் பெற வேண்டும் என அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை எந்த மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு இதுபோன்ற சலுகைகளை அறிவிக்கவில்லை. டெஸ்லா நிறுவன கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தால் அது இந்தியாவில் பல லட்சம் கோடி டாலா் முதலீடு செய்துள்ள இதர நிறுவனங்களுக்கு நல்ல சமிக்ஞையாக இருக்காது என மத்திய அரசு கருதுகிறது.
எனவே, வரிச் சலுகை தொடா்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவில் மின்சார காா்களின் உற்பத்தியை முதலில் தொடங்க என மத்திய கனரக அமைச்சகம் டெஸ்லாவை வலியுறுத்தியுள்ளதாக அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.