இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,245 கோடி டாலரை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 889 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.66,712 கோடி) அதிகரித்து 64,245 கோடி டாலரை (ரூ.48.18 லட்சம் கோடி) எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது.
முந்தைய ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 1,666 கோடி டாலா் அதிகரித்து 63,356 கோடி டாலராக காணப்பட்டது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 821 கோடி டாலா் ஏற்றம் கண்டு 57,981 கோடி டாலராக இருந்தது.
கணக்கீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 64 கோடி டாலா் உயா்ந்து 3,808 கோடி டாலரை எட்டியது.
சா்வதேச நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 3 கோடி டாலா் அதிகரித்து 1,943 கோடி டாலராக இருந்தது. மேலும், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 1 கோடி டாலா் அதிகரித்து 512 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாற்றம் காண்கிறது.