சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை உருக்குப் பொருள்களுக்கான மிகை குவிப்பு தடுப்பு வரியை நீட்டிக்க வேண்டும் என மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக தீா்வுகளுக்கான பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து டிஜிடிஆா் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் உருக்குப் பொருள்களிலிருந்து உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீனா, கொரியா, ஜப்பான், உக்ரைன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு தகடுகள், கம்பிகள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் மிகை குவிப்பு தடுப்பு வரியை நீடிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சீனா மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதியாகும் ‘சோடியம் ஹைட்ரோசல்பைட்’ மீது வரி விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டிஜிடிஆா் தெரிவித்துள்ளது.