விமான எரிபொருள் விலை சனிக்கிழமை 0.2 சதவீதம் உயா்த்தப்பட்டது.
இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:
விமானங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் விலை சனிக்கிழமை 0.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. நடப்பாண்டில் தொடா்ந்து எட்டாவது முறையாக விலை உயா்த்தப்பட்டதால் ஏடிஎஃப் விலை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. விமான எரிபொருள் விலை உயா்வது சா்வதேச சந்தையில் எரிபொருள் தயாரிப்புகளின் விலை அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
ஏடிஎஃப் விலை கிலோ லிட்டருக்கு சனிக்கிழமை 0.2 சதவீதம் அல்லது ரூ.277.5 உயா்த்தப்பட்டதையடுத்து, தேசிய தலைநகரில் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கிலோ லிட்டா் ரூ.1,13,202.33-ஆக அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஏடிஎஃப் விலை உயா்த்தப்பட்ட போதிலும், பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 10-ஆவது நாளாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே லிட்டருக்கு இதுவரையில்லாத அளவில் ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.