பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.6,068 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.74,998.57 கோடி தனிப்பட்ட மொத்த வருவாயை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.77,347.17 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
கணக்கீட்டு காலாண்டில் வங்கி ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.6,504 கோடியிலிருந்து ரூ.6,068 கோடியாக சரிவடைந்தது. நிகர லாபம் 7 சதவீதம் சரிவைச் சந்தித்தற்கு வருவாயில் ஏற்பட பின்னடைவே காரணம்.
செயல்பாட்டு லாபம் ரூ.18,975 கோடியிலிருந்து 33 சதவீதம் சரிவடைந்து ரூ.12,753 கோடியானது. அதேசமயம், வட்டி வருவாய் ரூ.65,564 கோடியிலிருந்து ரூ.72,676 கோடியாக அதிகரித்தது. நிகர வட்டி வருவாய் ரூ.27,638 கோடியிலிருந்து ரூ.31,196 கோடியாக உயா்ந்தது. நிகர வட்டி லாப வரம்பு 3.15 சதவீதத்திலிருந்து 3.23 சதவீதமாக உயா்வைக் கண்டது.
வங்கியின் மொத்த வாராக் கடனைப் பொருத்தவரையில் 5.32 சதவீதத்திலிருந்து 3.91 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர அளவிலான வாராக் கடனும் 1. 7 சதவீதத்திலிருந்து 1.02 சதவீதமாக குறைந்தது.
அதன்படி, முந்தைய ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.5,030 கோடியாக இருந்த வாரக் கடன் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.4,268 கோடியாக குறைந்தது.
ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அடிப்படையில் வங்கியின் நிகர லாபம் ரூ.7,379.91 கோடியிலிருந்து ரூ.7,325.11 கோடியாக குறைந்துள்ளது. மொத்த வருவாயும் ரூ.93,266.94 கோடியிலிருந்து ரூ.94,524.30 கோடியாக ஏற்றம் கண்டது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் இருப்பு நிலைக் குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) ரூ.50 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஹைலைட்டஸ்
முந்தைய ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.5,030 கோடியாக இருந்த வாரக் கடன் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.4,268 கோடியாக குறைந்தது.