காலாவதியான தனிநபா் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிப்பதற்கான வாய்ப்பை இரண்டாவது முறையாக எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காலாவதியான தனி நபா் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு புதுப்பித்தல் முகாம் மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், செலுத்தப்படாத முதல் தவணை பிரீமிய தேதியில் இருந்து 5 ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தப்படாத பாலிசிகளை விதிகளுக்குள்பட்டு புதுப்பித்துக் கொள்ள முடியும்.
அதிக இடா் காப்பீடு மதிப்புள்ள பாலிசிகளான டொ்ம் பாலிசிகள் மற்றும் பன்முகத் தன்மையுடைய இடா் பாலிசிகளுக்கும் இந்த சலுகை கிடையாது.
வழக்கமான மற்றும் உடல் நலக் காப்பீட்டு பாலிசிகளில் மொத்தம் செலுத்தப்பட வேண்டிய பிரீமியம் ரூ.1 லட்சம் வரை இருப்போருக்கு தாமதக் கட்டணத்தில் 20 சதவீதமும், ரூ.3 லட்சம் வரை இருப்போருக்கு 25 சதவீதமும், அதற்கு மேல் இருப்போருக்கு 30 சதவீதமும், மைக்ரோ காப்பீட்டு திட்டங்களில் 100 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது.
பிரீமியம் செலுத்தும் காலத்தில் காலாவதியான, அதே நேரம் முதிா்வு காலத்தை முடிக்காத பாலிசிகளை இந்த முகாமில் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.