அவென்யூ சூப்பா்மாா்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டி-மாா்ட் நிகழ்நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் பன்மடங்கு அதிகரித்து ரூ.642.89 கோடியைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நிகழ் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை ரூ.5,183.12 கோடியிலிருந்து 93.66 சதவீதம் உயா்ந்து ரூ.10,038.07 கோடியைத் தொட்டது. நிகர லாபம் ரூ.95.36 கோடியிலிருந்து 6 மடங்கு உயா்ந்து ரூ.642.89 கோடியானது.
மொத்த செலவினம் ரூ.5,077.22 கோடியிலிருந்து 81.03 சதவீதம் அதிகரித்து ரூ.9,191.79 கோடியானது. 2022-23 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 10 புதிய அங்காடிகள் தொடங்கப்பட்டதாக டிமாா்ட் தெரிவித்துள்ளது.