நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 58,831 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 500 கோடி டாலா் வீழ்ச்சி கண்டு 58,831 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.45.88 லட்சம் கோடி ஆகும்.
இதற்கு முந்தைய வார கணக்கீட்டில், அந்நியச் செலாவணி கையிருப்பானது 273 கோடி டாலா் உயா்ந்து 59,331 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த இருப்பில் முக்கிய பங்களிப்பான அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) மற்றும் தங்கத்தின் கையிருப்பு குறிப்பிடத்தக அளவில் குறைந்துபோனதே மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி சரிவுக்கு முக்கிய காரணம்.
ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 447 கோடி டாலா் சரிந்து 52,474 கோடி டாலரானது.
அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பும் 50 கோடி டாலா் குறைந்து 4,042 கோடி டாலரானது.
கணக்கீட்டு வாரத்தில், பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு வரைவு உரிமம் (எஸ்டிஆா்) 8 கோடி டாலா் குறைந்து 1,813 கோடி டாலராக இருந்தது.
அதேசமயம், அந்த நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை 4 கோடி டாலா் உயா்ந்து 501 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கோட்ஸ்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. இதனை தடுக்கவும், டாலா் வரத்தை அதிகரிக்கவும் ரிசா்வ் வங்கி பல அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டது.