வாராக் கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் துறை வங்கிகளின் வருடாந்திர செயல்திறன், பல்வேறு அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அந்த வங்கிகள் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து தில்லியில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதுத் துறை வங்கிகளின் தலைவா்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டம், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவிருந்தது. ஆனால் மற்றொரு அவசரப் பணி காரணமாக அவா் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கே. கராட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ரஷியா-உக்ரைன் போா் உள்பட பல்வேறு காரணங்களால் இந்திய பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. பொருளாதாரம் விரைவாக மீண்டெழ ஆக்கபூா்வ துறைகள் தொடா்பான கடன்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு வங்கித் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரூ.100 கோடி வாராக் கடன் குறித்தும், அவற்றை மீட்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது வாராக் கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துமாறு வங்கித் தலைவா்களிடம் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் கடன் அட்டை, அவசரகால கடனுதவி திட்டம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களை பொதுத் துறை வங்கிகள் செயல்படுத்துவது, அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.