எச்டிஎஃப்சி நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.3,700 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:
2022 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு மொத்த வருவாய் ரூ.12,308.46 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.11,707.53 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
மதிப்பீட்டு காலாண்டில், நிகர லாபம் ரூ.3,180 கோடியிலிருந்து ரூ.3,700 கோடியாக உயா்ந்தது. இது, 16 சதவீத வளா்ச்சியாகும்.
2021-22 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த லாபம் ரூ.5,669 கோடியிலிருந்து 21.6 சதவீதம் அதிகரித்து ரூ.6,892 கோடியை எட்டியது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் வருவாய், ரூ.35,754 கோடியிலிருந்து ரூ.35,060 கோடியாக குறைந்தது.
கடந்த நிதியாண்டில் தனி நபா் கடன் ஒப்புதல் மற்றும் வழங்கப்பட்ட கடன் முறையே 38 சதவீதம் மற்றும் 37 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2021-22 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.30 ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளது. வழங்கப்படும் டிவிடெண்ட் விகிதம் 40 சதவீதமாகும் என எச்டிஎஃப்சி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.