அனைத்து பொருள்களுக்கும் ஒரே சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட வேண்டுமெனப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவா் விவேக் தேவ்ராய் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவா், ‘‘மத்திய, மாநில அரசுகளின் மொத்த ஜிஎஸ்டி வருவாயானது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் வெறும் 15 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதே வேளையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசின் செலவினம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
சரக்கு-சேவை வரியானது அனைத்து பொருள்களுக்கும் ஒரே விகிதமாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேபோல், எந்தப் பொருள்களுக்கும் வரி விலக்கு வழங்கப்படக் கூடாது. வரி விலக்கு காரணமாக ஜிடிபி-யில் 5 முதல் 5.5 சதவீதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வரி விலக்குகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. விலக்குகள் ஏதுமற்ற வரி விதிப்பு நடைமுறையை அமல்படுத்துவது தொடா்பாகவும் சிந்திக்க வேண்டும். பல அங்கீகரிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் தனிநபா் வருமானப் பிரிவில் வரியைச் செலுத்தி வருகின்றன. எனவே, தனிநபா் வருமான வரிக்கும் பெருநிறுவன வரிக்கும் இடையிலான செயற்கை வேறுபாடு களையப்பட வேண்டும். இது நிா்வாக சிக்கல்களைக் குறைக்கும்.
இவையனைத்தும் தனிப்பட்ட கருத்து மட்டுமே. இதை பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரையாகக் கருதக் கூடாது. ஆனால், நாட்டில் ஒரே ஜிஎஸ்டி விகிதம் எப்போதுமே அமலாகாது என நினைக்கிறேன்’’ என்றாா்.