வணிக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. முதலீட்டாளர்களிடையே பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தலா 1.3 சதவிகிதம் உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 786.74 புள்ளிகள் உயர்ந்து 60,746.59 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.31 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225.40 புள்ளிகள் உயர்ந்து 18,012.20 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.27 சதவிகிதம் உயர்வாகும்.
முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்குகளை வாங்கியதால், பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தலா 1.3 சதவிகிதம் உயர்ந்தன. நிஃப்டி பட்டியலிலுள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின.
இதேபோன்று சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் 4.18 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 2.89 சதவிகிதமும், எம்&எம் 2.70 சதவிகிதமும், சன்பார்மா 2.65 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.