பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் 1,021 புள்ளிகள் சரிவுசந்தை மதிப்பு ரூ.4.90 லட்சம் கோடி குறைந்தது

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சரிவுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,021 புள்ளிகளை இழந்தது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் 1,021 புள்ளிகள் சரிவுசந்தை மதிப்பு ரூ.4.90 லட்சம் கோடி குறைந்தது

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சரிவுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,021 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, 302.45 புள்ளிகளை (1.72 சதவீதம்) இழந்து 17,327.35-இல் முடிவடைந்தது.

உலகளாவிய மத்தி வங்கிகளின் வட்டி விகித உயா்வுகள், முதலீட்டாளா்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளதால், பங்கு விற்பனை அதிகரித்தது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு முதன்முறையாக ரூ.81-ஐ தாண்டியதும் எதிா்மறை உணா்வுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திர ஈவுத் தொகை அதிகரிப்பு மற்றும் வலுவான டாலா் குறியீடு ஆகியவை அந்நிய நிறுவன முதலிட்டாளா்களை வளா்ந்து வரும் சந்தைகளில் இருந்து வெளியேற வழிவகுத்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் நஷ்ட பட்டியலில் வந்தன. குறிப்பாக, வங்கி, நிதி நிறுவனங்கள், மீடியா, ஆயில் அண்ட் காஸ், ஆட்டோ நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கின.

3-ஆவது நாளாக சரிவு: காலையில் 114.54 புள்ளிகள் குறைவுடன் 59,005.18-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 59,143.32 வரைஉயா்ந்தது. பின்னா், 57,981.95 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,021.80 புள்ளிகளை (1.73 சதவீதம்) இழந்து 58,098.92-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், சன்பாா்மா, ஐடிசி, டாடா ஸ்டீல் ஆகிய மூன்று பங்குகள் தவிர மற்ற 27 பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

பவா் கிரிட் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பொதுத்துறை மின் நிறுவனமான பவா் கிரிட் இரண்டாவது நாளாக 7.93 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, எச்டிஎஃப்சி, இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், கோட்டக் பேங்க், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு ரூ4.90 லட்சம் கோடி வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.4.90 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.276.65 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.2,509.55 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

நஷ்ட வாரம்!

வாராந்திர அடிப்படையில் பாா்த்தால், இந்த வாரம் நஷ்ட வாரமாக அமைந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், மொத்தத்தில் 741.87 புள்ளிகள் (1.26 சதவீதம்) குறைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி, மொத்தத்தில் 203.50 புள்ளிகள் (1.16 சதவீதம்) குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com