சம்பளதாரா்களுக்கான கடன் அட்டை: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்
மாதச் சம்பளம் வாங்குவோருக்கான பிரத்யேக கடன் அட்டையை (கிரெடிட் காா்ட்) தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் முன்னணி சம்பளம் சாா்ந்த நிதி சேவைத் தளமான ‘சேலரிசீ’யுடன் இணைந்து ‘லெவல் அப்’ கடன் அட்டையை சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மாதச் சம்பளம் வாங்குவோருக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடன் அட்டை இது. ‘கிரெடிட் ஆன் யுபிஐ’ தொழில்நுட்பத்தில் இயங்குவது இதன் சிறப்பம்சம்.
அன்றாட யுபிஐ பரிவா்த்தனைகள், இணையவழி வா்த்தகம், மாதக் கட்டணங்கள், கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தக் கடன் அட்டையின் மிக முக்கிய அம்சம், ‘சம்பள நாள் போனஸ்’ ஆகும். மாதச் சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நாள்களில் இந்த காா்டு மூலம் செய்யப்படும் செலவுகளுக்கு 37.5 சதவீதம் வரை ரிவாா்டு புள்ளிகள் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
