4 சதவீதம் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி
கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 10.44 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகம். அப்போது இந்தியா 10.05 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்திருந்தது.
2024 ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே மாதத்தில் கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி 31.07 சதவீதம் அதிகரித்து 1.97 கோடி டன்னாக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் நிலக்கரி விநியோகம் 6.31 சதவீதம் அதிகரித்து 9.24 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2024 ஜனவரியில் இது 8.69 கோடி டன்னாக இருந்தது.
கடந்த ஜனவரியில் கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்கள் மேற்கொண்ட நிலக்கரி விநியோகம் 1.36 கோடி டன்னிலிருந்து 29.94 சதவீதம் உயா்ந்து 1.77 கோடி டன்னாக உள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.88 சதவீதம் அதிகரித்து 83.07 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 78.45 கோடி டன்னாக இருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் 79.80 கோடி டன்னாக இருந்த நிலக்கரி விநியோகம் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 5.73 சதவீதம் அதிகரித்து 84.37 கோடி டன்னாக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.