தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கேரளம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கேரள சுற்றுலாத் துறை இணை இயக்குநர் கே.பி.நந்தகுமார் கூறினார்.
கேரள சுற்றுலாத்துறை சார்பில் மதுரையில் நடைபெற்ற சுற்றுலா மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சுற்றுலாத் துறைக்கு தேசிய அளவில் வழங்கப்படும் 9 விருதுகளில் கடந்த ஆண்டில் மட்டும் கேரள சுற்றுலாத் துறை 4 விருதுகளைப் பெற்றிருக்கிறது.
கேரளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டில் தமிழகத்தில் இருந்து மட்டும் ஒரு கோடியே 27 லட்சம் பேர் கேரளத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 11 லட்சம் பேர் வந்துள்ளனர். கடந்த ஆண்டில் கேரளம் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை அடைந்திருந்தாலும் சுற்றுலாத்துறை அதிலிருந்து மீண்டு வருகிறது. கேரள சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் மேம்பாட்டுக்கான கூட்டங்கள் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருன்றன. இதன் ஒரு பகுதியாக மதுரையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. திருவனந்தபுரத்தில் ஜடாயு எர்த் சென்டர் என்ற சுற்றுலா தலம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 200 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 70 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய ஜடாயு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, தென்னிந்தியாவின் முதல் உயிரி அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.