சென்னை: நீட் பயிற்சி மையங்களில் ரூ.30 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்லில் உள்ள நீட் தனியார் பயிற்சி மையத்தில் பள்ளி ஆடிட்டோரியத்தில் பணத்தை பதுக்கி வைத்திருந்ததும், அசையா சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நாமக்கல், பெருந்துறை, சென்னை, கரூரில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடி அளவுக்கு வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான அசையா சொத்துக்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.
நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் நீட் பயிற்சி மையத்தில் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.30 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் ஆடிட்டோரியத்தில் பணத்தையும், அசையா சொத்துக்களின் ஆவணங்களும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நாமக்கல் தனியார் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிக ஊதியத்துக்கு ஆசிரியர்களை நியமித்ததும் தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.