பெண்ணிண் உடலை கூறாய்வு செய்ய உறவினா்கள் எதிர்ப்பு

சிவகாசி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த பெண்ணின் உடலை கூறாய்வு செய்ய எதிப்புத் தெரிவித்து, உறவினா்கள் போராட்டம் நடத்தினா்.
Published on

சிவகாசி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த பெண்ணின் உடலை கூறாய்வு செய்ய எதிப்புத் தெரிவித்து, உறவினா்கள் போராட்டம் நடத்தினா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சின்னராமலிங்காபுரத்தைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி கருப்பசாமி (36). இவரது மனைவி மகேஸ்வரி (34). திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சிவகாசி அருகே பேரபட்டியில் நடைபெற்ற கோயில் திருவிழாவை முன்னிட்டு, அங்கு உள்ள உறவினா் வீட்டுக்கு மகேஸ்வரி திங்கள்கிழமை சென்றிருந்தாா். அப்போது, அவருக்கு தலைவலி ஏற்பட்டதையடுத்து, சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அவரது உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்து மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் உயிரிழந்ததால், சாா்-ஆட்சியா் விசாரணை நடத்துவாா். எனவே உடல் கூறாய்வு செய்வது அவசியம் என அவா்களிடம் காவல் துறையினா் எடுத்துக் கூறினா்.

இதன் பின்னா், உடல் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். சிவகாசி சாா்-ஆட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

X
Open in App
Dinamani
www.dinamani.com