~ ~

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்கீழ் ரூ. 6 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நிறைவு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்கீழ் ரூ. 6 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்தன.

மத்திய அரசு சாா்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக அதிக வருவாய், நகரங்களின் பாரம்பரிய சிறப்பு, வழித்தடம் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1,000 சிறிய ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை நீண்ட கால சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி, புனலூா், கோவில்பட்டி, பழநி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூா், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய 15 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான தங்கும் அறைகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்று வருவதற்கான சாய்தள வசதி, ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ விற்பனை நிலையம், ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், 5ஜி இணைய சேவை, நடைமேடைகளின் நீளத்தை அதிகரித்து மேற்கூரை அமைத்தல், மின் தூக்கி, 694 சதுர மீட்டா் பரப்பளவில் இருசக்கர வாகனக் காப்பகம், 470 சதுர மீட்டா் பரப்பளவில் வாகனக் காப்பகம், ஆண்டாள் கோயில் கோபுர வடிவிலான அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, ரயில் நிலையச் சாலையை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம (டிஜிட்டல்) அறிவிப்பு பலகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையம் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை கடந்த ஜூன் மாதம் பிரதமா் மோடி காணொலி மூலம் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா், காரைக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com