திரைக் கதிர் - 22

"வேலைக்காரன்' படத்துக்குப் பின்  சிவகார்த்திகேயன் - நயன்தாரா  ஜோடி மீண்டும் புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர். இப்படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார்.
திரைக் கதிர் - 22

"வேலைக்காரன்' படத்துக்குப் பின்  சிவகார்த்திகேயன் - நயன்தாரா  ஜோடி மீண்டும் புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர். இப்படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார். பெயரிடப்படாமலே "எஸ்கே 13' என்ற தற்காலிக தலைப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. "பாஸ் என்கிற பாஸ்கரன்', "சிவா மனசுல சக்தி', "ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் இப்படம் உருவாவதால் இது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில் இப்படத்துக்கு பெயரிடுவது குறித்து படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது.  "ஜித்து ஜில்லாடி'  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில் "மிஸ்டர் லோக்கல்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன், நயன்தாரா,  முக்கிய வேடத்தில் ராதிகா நடிக்கிறார்கள். "ஹிப்ஹாப் தமிழா' ஆதி இசை அமைக்கிறார். 

-------------------------------------------------


22 வருடங்களுக்குப் பின் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வருகிறது "இந்தியன் 2'. 

இப்படத்துக்கான பணிகளை  "2.0' படப்பிடிப்பை முடிந்தவுடனே கவனிக்க தொடங்கினார் ஷங்கர். வெளிநாட்டிற்கு சென்று தங்கி திரைக்கதை பணியை முடித்தார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் படப்பிடிப்பு நடக்கும் தளங்களைப் பார்வையிட்டார். சென்னை, அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களை இருவரும் தேர்வு செய்தனர்.  பின்னர் அரங்குகள் நிர்மாணிக்கும் பணி நடந்தது. ஹாலிவுட் மேக் அப் கலைஞர்களை வரவழைத்து கமலுக்கு இந்தியன் தாத்தா தோற்றம் அணிந்து டெஸ்ட் ஷூட் நடத்தினார். இதற்கிடையில் கமல் தனது "மக்கள் நீதி மய்யம்' சார்பில் நடந்த பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டார். எல்லா வேலைகளும் முடிந்து  படப்பிடிப்பு தொடங்கியது. இந்தியன் தாத்தா தோற்றத்தில் கமல் நடித்த காட்சிகள் அவருடன்  காஜல் அகர்வால் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு தொடங்கிய ஓரிரு நாளிலேயே படப்பிடிப்பை நிறுத்தினார் ஷங்கர். படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கு அவர் நினைத்ததுபோல் வராததே இதற்குக் காரணமாம். இதையடுத்து தயாரிப்பு வடிவமைப்பாளரை அழைத்து அரங்கில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தெரிவித்தார். அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. திருப்திகரமாக அரங்கு வடிவமைக்கப்பட்ட பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

-------------------------------------------------

ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம்   "பாண்டிமுனி'. ஷியாஜி ஷிண்டே, மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, சிவசங்கர், சுமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய வேடமேற்று நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. அமானுஷ்ய சக்திகளின் பின்னணியைக் களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்குச் சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட  அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் இப்படத்துக்காகப் படமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப்பட்டு, அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டன. ""கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும்'' என்கிறார் கஸ்தூரிராஜா.


-------------------------------------------------

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் இலியானா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் கால் பதித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ஹிந்தி படங்களில் பெற்ற வெற்றியை அவரால் தென்னிந்திய மொழிகளில் அடைய முடியவில்லை. சிறிது இடைவெளிக்குப் பின் பாலிவுட்டில் எழுந்த போட்டியையும் அவரால்  சமாளிக்க முடியவில்லை.

இப்போது பட வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தென்னிந்தியப் படங்களில் கவனத்தைத் திருப்ப முடிவு செய்தார். அதற்காக தெரிந்த நண்பர்களைத் தூதுவிட்டு வாய்ப்பு தேடியதுடன் தனது புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டார். அதற்கு பலன் கிடைத்தது. சுமார் 6 வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் கடந்த ஆண்டு "அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வந்த வாய்ப்பை இலியானா ஏற்றுக்கொண்டார்.  அதைப் பயன்படுத்தி ஏற்கெனவே தான் விட்டுச்சென்ற இடத்தைபிடித்துவிடலாம் என்று எண்ணினார். அதற்காக மெலிந்திருந்த தனது உடற்கட்டை மீண்டும் பெருத்த தோற்றத்துக்கு மாற்றி கவர்ச்சியாக நடனம் ஆடினார். அப்படம் முடிந்து திரைக்கு வந்த நிலையில் இலியானாவின் எதிர்பார்ப்புகள் சிதைந்து போயின. இலியானாவின் தோற்றத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டதே இதற்கு காரணம். இதனால் மனம் நொந்துபோனவர், சில மாதங்கள் வாய்ப்புக்காக காத்திருந்துவிட்டு அது கைகூடாததால் மும்பை புறப்பட்டு சென்றார். தற்போது கைவசம் படம் எதுவும் அவரிடம் இல்லை.

-------------------------------------------------


இணைய தளப் பக்கங்களில் யாரைப் பற்றியும் கருத்து சொல்லலாம் என்றாகிவிட்ட நிலையில் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் பலர் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் 43 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல்  வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இரண்டு குழந்தைக்கு தாய் ஆகியிருக்கிறார். அதாவது, இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதற்கிடையில் ரோமேன் ஷாவல் என்பவரைக் காதலித்தும் வருகிறார். இந்தநிலையில் கடந்த வாரம் ஒரு தகவல்  பகிர்ந்தார். "திருமணச் சடங்கை யார் கண்டுபிடித்தார்களோ அவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்' என தெரிவித்திருந்தார். அவரது இந்த பதிவை, வரவேற்பதற்கு பதில் பலர் வசைமழை பொழிந்துவிட்டனர். "திருமணச் சடங்கை அவதூறாகப் பேச வேண்டாம். இருவருக்கிடையேயான உண்மை, நம்பிக்கையை அது இணைத்து வைக்கிறது. விலங்குகளிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது. திருமணம் என்பது தெய்வீகம். மற்றொரு உயிருக்கு வித்திடுவது' என சரமாரியாகப் பதில் அளிக்கத் தொடங்கினர். பதறிப் போன சுஷ்மிதா, "எனது பதிவை ஜோக்காக எடுத்துக்கொண்டு சிரித்து மகிழுங்கள்' என பதிவிட்டு சமாதானப்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com