(நெல்லை மாவட்டம் களக்காடு என்ற ஊரில் உள்ள ஓர் அச்சகத்தில்)
சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள்
எங்கள் அச்சகத்தின் மூலம் தொடங்கட்டும்.
டும்...டும்... டும்...
எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்.
(கோவை - நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள ஒரு கடையின் பெயர்)
கழுதை உலர் சலவையகம்
க.விஸ்வநாதன், கோயம்புத்தூர்-45.
(திருவாடானையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனின் முகப்பில்)
மாமா வீட்டுப் பிள்ளை
கூ.முத்துலெட்சுமி, திருவாடானை.
(வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள ஒரு சிற்றூரின் பெயர்)
நெல் வாய்
பா.அனுஆரண்யா பாண்டிசங்கர், சென்னை-77.
(ஆத்தூர் கடைவீதியில் இருவர்)
"" ஓசியிலே லிஃப்ட் கேட்கிற ஆளைப் பார்த்துத்தான் வண்டியிலே ஏத்தலாமா இல்லையான்னு முடிவெடுப்பியா? எப்படி?''
""வெயிட்டான ஆள்ன்னா ஏத்த மாட்டேன்''
""ஏன் வண்டி இழுக்காதா?''
"" அட நீ வேற... வெயிட்டான ஆளை ஏத்திட்டா... நான் பெட்ரோல் டேங்க் மேலே உட்கார்ந்துகிட்டுத்தான் வண்டி ஓட்டணும்''
எஸ்.செந்தில்குமார், ஆத்தூர்.
(கம்பைநல்லூர் பள்ளி ஒன்றின் அருகே ஆறாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள்)
""டேய் சிவா... நம்ம கணக்கு வாத்தியாருக்கு ஞாபக மறதி ரொம்ப''
""எப்படிச் சொல்றே?''
""நேத்து ஐந்தும் ஐந்தும் பத்துன்னு சொன்னார். இன்னிக்கு ஆறும் நாலும் பத்துங்கிறார்''
ஆ.சுகந்தன், கம்பைநல்லூர்.
யோசிக்கிறாங்கப்பா!
மத்தவங்களுக்கு ஒரு பிரச்னைன்னா
நம்ம மூளை பயங்கரமா வேலை செய்யுது...
அதுவே நமக்கு ஒரு பிரச்னைன்னா-
கிணத்துல போட்ட கல்லு மாதிரி அப்படியே இருக்குது.
ஆர்.சங்கீதா ரமணன், ராசிபுரம்.
இராமசாமியும் குமாரசாமியும் நண்பர்கள். நடுத்தெருவில் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்.
""அப்புறம் அந்த விஷயம் என்னாச்சு?''
""அது அப்படியேதான் இருக்கு. இன்னும் ரெண்டு நாள் போனால்தான் தெரியும்''
""சரி... நேற்று ஒரு சமாச்சாரம் சொன்னேனே... அது விஷயமா என்ன முடிவு பண்ணினீங்க?''
""ஓ... அதுவா நாளைக்குச் சொல்றேனே என் முடிவை''
""ரொம்பச் சரி.... இன்னொன்னு இருக்கு பாருங்கோ... நீங்களே நேரடியாக கவனிக்கணும்னு சொல்லியிருந்தேனே... அது என்ன ஆச்சு?''
""அடடா... நீங்க அது விஷயமா அப்புறம் ஞாபகப்படுத்தவே இல்லையே... சரி... சரி... வீட்டுக்குத் திரும்பியதும் முதல் வேலையா கவனிக்கிறேன்''
""சரி... இந்த மாதிரி விஷயங்களை நடுத்தெருவில் பேசக் கூடாது... யாராவது கேட்டால் என்ன ஆவது?''
ஆதினமிளகி, வீரசிகாமணி.
பிறருக்கு மரியாதை கொடுத்தால் அதற்கு விலை இல்லை.
ஆனால்...
அது எல்லாவற்றையும் விலையில்லாமலேயே வாங்கிவிடுகிறது.
சி.ரகுபதி, போளூர்.
கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள் காதிற்கு வெளிப்புறத்தில் கேட்கும் ஒலியை அதிகப்படுத்தும் கருவியை மாட்டியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியைப் பார்த்த உடனேயே அவருக்குக் கேட்கும் திறன் குறைவு என்பது எல்லாருக்கும் தெரிந்துவிடுகிறது. இது கேட்கும்திறன் குறைவாக உள்ளவர்களின் மனநலனைப் பாதிக்கிறது. எனவே இந்தக் கருவியை காதின் உள்புறத்தில் பொருத்தும் அறுவைச் சிகிச்சையைச் செய்யத் தொடங்கினார்கள். அதற்கு காதின் உள்புறத்தில் பொருத்த பொருத்தும் இடத்துக்கு அருகே உள்ள மண்டை ஓட்டை சிறிது துளையிட வேண்டும். அப்படித் துளயிடும்போது முகத்தின் நரம்புகள், சுவையுணர்வு நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மிக மிகத் துல்லியமாக துளையிடும் இடத்தைத் தேர்வு செய்வது, துளையிடும்போது துளையிடப்பட வேண்டிய இடம் விலகிவிடாமல் சரியான இடத்தில் துளையிடுவது என்பதை மனிதக் கரங்களை நம்பி செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், அதற்காக ஒரு மிகச் சிறிய ரோபாட்டை உருவாக்கி இருக்கிறார்கள்.
அந்த சிறிய ரோபாட் மனித முடியின் அகலத்தை விட 25 மைக்ரான்ஸ் அளவு குறைவானது. அது தனது முதுகில் ஒரு கேமராவையும் சுமந்து கொண்டு (அந்த கேமரா இன்னும் எவ்வளவு சிறியதாக இருக்கும்!), காதின் உள்புறத்துக்குச் சென்று, தேவையான இடத்தில் தேவையான அளவு மிகத்துல்லியமாகத் துளையிட்டு திரும்பி வந்துவிடுகிறது. இதற்கு முன்பு இந்த ரோபாட்களின் உதவியின்றி செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைகளில் 30 இலிருந்து 35 சதவீதம் வரை தோல்வியடைந்துவிட்டதால் இந்த ரோபாட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
- என்.ஜே., சென்னை-116.