• சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி குழந்தை மருத்துவர். இது நாள் வரை சச்சினின் பின்புலமாக இருந்து, இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். இன்று குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டனர். இதனால் குழந்தைகள் பாதிக்கப்படும் நோய்கள் சார்ந்த மேற்படிப்பினை மேற்கொள்ள பிரிட்டன் செல்கிறார். ஆய்வுகளுக்கு தேவைப்பட்டால் மும்பை சயான் மருத்துவமனையைப் பயன்படுத்திக் கொள்வாராம்.
ராஜிராதா, பெங்களூரு.
• அந்தக் கவிஞர் திரைப்படத்தில் பாட்டெழுத கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பிரபல இசையமைப்பாளருக்கு வேண்டிய ஒருவர், அந்தக் கவிஞரை அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.
தான் எழுதிய பாடல்கள் அடங்கிய நோட்டை இசையமைப்பாளரிடம் கொடுத்தார் கவிஞர். அதைப் படித்துப் பார்த்த இசையமைப்பாளர், "தம்பி உனக்கு சினிமாவுக்கு பாட்டு எழுத வராது. ஒழுங்கா வேறு வேலையைப் பாரு'' என்று அனுப்பிவிட்டார். பிறகு அதே இசையமைப்பாளர் அவரது நூற்றுக் கணக்கான பாடல்களுக்கு இசையமைக்கும் காலமும் வந்தது.
அந்தக் கவிஞர் - வாலி
இசையமைப்பாளர் - எம்.எஸ்.விசுவநாதன்.
- வி.ந.ஸ்ரீதரன், சென்னை.