(கோவை பெரியகடை வீதியில் உள்ள ஒரு புத்தகக் கடையின் பெயர்)
தமிழ் அருந்தகம்
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
(கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் கிராமத்தில் உள்ள ஒரு தெருவின் பெயர்)
கிறிஸ்துமஸ் தெரு
நெ.இராமன், சென்னை-74
(ஈரோட்டில் உள்ள ஒரு மின்மயானத்தின் பெயர்)
ஆத்மா
க.ரவீந்திரன், ஈரோடு.
(தொண்டியில் ஒரு லாரியின் பின்புறத்தில்)
உலகம் சுற்றும் வாலிபன்
கே.முத்துச்சாமி, தொண்டி.
யோசிக்கிறாங்கப்பா!
மனைவி படத்தை மொபைலில் தினமும்
பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால்,
அவன் புதிதாகத் திருமணமானவனாகத்தான் இருக்கும்.
இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
(நாமக்கல்லில் ஒரு மளிகைக் கடைக்காரரும், வாடிக்கையாளரும்)
""வியாபாரமெல்லாம் எப்படி இருக்கு?''
""நல்லா இல்லை. பேசாம ஓடிப் போயிடலாம் போலிருக்கு''
""உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?''
""இல்லை''
""அப்ப தாராளமா ஓடிப் போகலாம்''
யூ.பைஸ் அஹமத், நாமக்கல்.
(அரியலூர் பேருந்து நிறுத்தம் அருகே இரு மாணவர்கள்)
"" ரொம்ப நேரமா பஸ் வரலியே... யார்ட்டயாவது லிஃப்ட் கேட்டுட்டுப் போக வேண்டியதுதானே?''
""யார் கிட்டயும் கை நீட்டி நிக்க கூடாதுன்னு எங்க அப்பா சொல்லி இருக்காரு''
தி.மதிராஜா, காட்டுமன்னார் கோயில்.
ஒரு பெண் வெங்காயம் வாங்க மார்க்கெட்டுக்குப் போனாள். ஒரு கடையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.15 என்று எழுதிப் போடப்பட்டிருந்தது. அதைவிட வேறு கடையில் குறைவாக இருக்கலாம் என்று நினைத்து வேறொரு கடையில் வெங்காயத்தின் விலையைக் கேட்டாள். ரூ.20 என்றார் கடைக்காரர்.
""என்ன அநியாயமா இருக்கு? பக்கத்துக் கடையில் ரூ.15 தானே?'' என்றாள்.
""அப்படீன்னா நீங்க அங்கேயே வாங்கிக்கங்க'' என்றார் கடைக்காரர்.
பக்கத்துக் கடைக்குச் சென்று, ""ரெண்டு கிலோ வெங்காயம் தாங்க'' என்றாள்.
கடைக்காரர் சொன்னார்: ""வெங்காயம் ஸ்டாக் இல்லை''
பார்கவி, சென்னை-33.
மனிதர்களில் முதல் தரமாக இரு...
அதிலும் நிரந்தரமாக இரு.
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
ஆப்பிரிக்க நாடுகளில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் குறிப்பாக ருவாண்டா நாட்டில் அதிகம். நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சையின்போது தேவைப்படும் ரத்தம் இல்லாமல் இறந்து போகிறவர்கள் அதிகம். ருவாண்டா நாட்டின் அரசும், அமெரிக்காவில் உள்ள ஒரு தொழில் நிறுவனமும் இந்நிலையை மாற்ற ஸிப்லைன் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிறுவனத்தில் உள்ள ட்ரோன்கள் ரத்தம் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு ரத்தத்தை விநியோகம் செய்கின்றன. கடந்த மார்ச் 2016-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ருவாண்டாவில் மட்டும் இதுவரை 7000 யூனிட் ரத்தத்தை 21 மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்திருக்கின்றன.
வேறு எந்த வாகனத்திலும் இவ்வளவு வேகத்தில் சென்று, தேவைப்படும் இடத்துக்குச் சென்று ரத்தம், பிஸாஸ்மா, ரத்த செல்கள், பிளேட்லெட்ஸ் எல்லாம் விநியோகிக்க முடியாது.
இப்போது டான்சானியா நாடும் இந்த ட்ரோன் சேவையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்லும் இந்த ட்ரோன்களில் ரத்த மற்றும் ரத்தம் சார்ந்த பொருள்கள் உள்ள சிறு பெட்டி கட்டப்பட்டு, தேவையான இடம் வந்ததும் இந்த பெட்டி ஒரு சிறிய பாராசூட்டின் மேல் கட்டப்பட்டு கீழே போடப்படும். தேவையானவர்கள் அதை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். ஆப்பிரிக்காவின் போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இந்த ட்ரோன் சேவை மிகப் பயனுள்ளதாக இருக்கிறது.
என்.ஜே., சென்னை-116.