(சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு கடையின் பெயர்)
காதலி எலக்ட்ரானிக்ஸ்
எஸ்.செந்தில்குமார், ஆத்தூர்.
(சென்னை ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் பெட்டிக்கடையொன்றில் எழுதப்பட்டு இருந்த வாசகம்)
MAT மிதவாதம்
BAT தீவிரவாதம் - கொசுவுக்கு.
பாலா சரவணன், சென்னை.
(சிவகங்கை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
பணக்கரை
மு.சுகாரா, திண்டிவனம்.
(விழுப்புரத்தில் ஓர் உணவு விடுதியில் இப்படியோர் அறிவிப்பு)
ஐயா, இவ்வுலகில் நான் பட்ட கடன் பெரியது.
தாங்கள் சாப்பிட்டு, கடன் சொல்லாதீர்கள்.
இப்படிக்கு,
ஓட்டல் அதிபர்.
ஏ.விக்டர் ஜான், சென்னை-62.
ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக...
மற்றவர்கள்
செல்பேசியில் நம்பர்களாக.
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளம்பட்டி.
(மதுரை காரியாபட்டி பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்)
""என்னண்ணே... தலையில் பெரிய கட்டு?''
""பக்கத்து ஊருக்கு ஒரு பஞ்சாயத்து பண்ணப் போனேன். அங்கே கொஞ்சம் கைகலப்பு ஆகி போச்சி''
""அட என்னண்ணே நீங்க... பாகிஸ்தானுக்குப் போனவரே பத்திரமா திரும்பி வந்துட்டாரு. நீங்க என்னடான்னா பக்கத்து ஊருக்குப் போயிட்டு தலையில் கட்டுப் போட்டுட்டு வர்றீங்க?''
ஆர்.நாகராஜ், மதுரை-1
(கொள்ளிடம் கல்யாண மண்டபம் ஒன்றில் இரண்டு பெரியவர்கள் பேசிக் கொண்டது)
"" மாப்பிள்ளையோடு அவர் பெரியப்பா கையிலே கல்யாணப் பத்திரிகையோடு ஏன் சண்டை போடுறார்?''
""மாப்பிள்ளையின் அப்பா இறந்துட்டார். அதனால் அவர் பெயருக்கு முன்னால் "லேட்' என்று கல்யாணப் பத்திரிகையில் போட்டிருக்காங்க. என் பெயருக்கு முன்னால ஏன் அப்படி போடலைன்னு இவர் சண்டை போடுறார்''
க.ராஜிவ்காந்தி, கவணை.
இண்டர்வியூ. மேனேஜர் வித்தியாசமான கேள்விகளாகக் கேட்டு எல்லாரையும் திணற அடித்துக் கொண்டிருந்தார். சுரேஷ் முறை வந்தது.
மேனேஜர் கேட்டார்:
""திடீரென என்னை ஒருவன் கொலை செய்ய வருகிறான். அவனிடம் இருந்து என்னை எப்படிக் காப்பாய்?''
""என் துப்பாக்கியால் அவனைச் சுடுவேன்''
""உன்னிடம் துப்பாக்கி இல்லா விட்டால்?''
""கத்தியால் குத்துவேன்''
""கத்தியும் இல்லாவிட்டால்?''
""சத்தம் போட்டு பிறரை உதவிக்கு அழைப்பேன்''
""யாரும் வரவில்லை என்றால்?''
""என்னுடன் வந்து வெளியில் எனக்காகக் காத்திருக்கும் தாத்தாவை அழைப்பேன்''
""தாத்தாவா? எதுக்கு?''
""தன் வாழ்நாளில் ஒரு கொலை நடப்பதை அவர் இதுவரை பார்த்ததில்லையாம். அதைப் பார்க்க அவரை அழைப்பேன்''
சாய் ஜயந்த், சென்னை-56
என்னதான் நம் மேல் வெயில் அடித்தாலும்
நம்மால் அதைத் திருப்பி அடிக்க முடியாது.
பி.சி.ரகு, பள்ளிச்சேரி.
நல்ல சாலைகளில் கார் ஓட்டுவதே பலருக்குச் சிரமம். கார் ஓட்டுபவர்களுக்கு அதிகச் சிரமத்தைத் தருபவை குண்டும் குழியுமான சாலைகள். புழுதி உள்ள பாதைகளில் கார் சக்கரங்கள் செல்வது கொஞ்சம் கடினம். ஆனால் அதைவிட கடினமான பாதை ஒன்று உள்ளது. காஷ்மீரில் பனிக்காலத்தில் பாதையெங்கும் ஐஸ்கட்டிகள் படிந்துவிடும். அந்தப் பாதைகளில் கார்களை ஓட்டிச் செல்ல முடியாது.
ஐஸ் கட்டி பாதைகளில் கார்களை ஓட்டிச் செல்ல கார்களின் சக்கரத்தில் மாட்டிக் கொள்ள டயர் செயின்கள் வந்துவிட்டன. இந்த செயின்கள் பலவடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை டயர்களில் மாட்டிக் கொண்டு ஐஸ்கட்டிப் பாதைகளில் காரை எளிதாக ஓட்டிச் செல்லலாம்.
என்.ஜே., சென்னை-116.