அறிவுப் பொக்கிஷம்!

காலம் காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தை பிரமிப்பிலும் பயபக்தியிலும் ஆழ்த்திவரும் முக்கிய உடல் உறுப்பு மூளை. 30 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். பணியில் உள்ள
அறிவுப் பொக்கிஷம்!

காலம் காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தை பிரமிப்பிலும் பயபக்தியிலும் ஆழ்த்திவரும் முக்கிய உடல் உறுப்பு மூளை. 30 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். பணியில் உள்ள இறையன்பு, "மூளைக்குள் சுற்றுலா' என்ற நூல் மூலம் மூளைக்குள் நீண்ட பயணத்தைச் செய்துள்ளார். 
இந்த நூலுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநர் கே.எஸ்.சுப்பிரமணியன் எழுதியுள்ள 13 பக்கங்கள் கொண்ட அறிமுக உரையைப் படித்த உடனேயே நூலின் முழுப் பரிமாணத்தையும் உணர முடிகிறது. நூலை அவர் முழுமையாகப் படித்து அறிமுக உரையை ஆய்வுரையாக அளித்துள்ளார். 
"மனிதனின் மகத்துவம்', "நரம்பு மண்டலம்', "மூளைக்குள் சுற்றுலா', "வளமான வாழ்வுக்கு மூளை", "ஹார்மோன்கள்', "புலன்கள்', "மூளைப் பிரச்னைகள்', "மனப் பிரச்னைகள்', "புரியாத புதிர்கள்', "நிறைவாக (கற்பிதங்களும் உண்மைகளும்...)' என 10 அத்தியாயங்களில் 138 தலைப்புகளில் மூளை குறித்து விரிவாக தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார் இறையன்பு.
இந்த நூல் இரண்டு பெரும் பகுதிகளாக அமைந்துள்ளது. 1. மூளை, அது சார்ந்த நரம்பு மண்டலம் குறித்த பகுதிகள். 2. நரம்பு மண்டலம் குறித்த பகுதிகளின் பங்களிப்புகளும் பரஸ்பரப் பிணைப்புகளும். இரண்டாவது பகுதியின் நீட்சியாக மூளை சார்ந்த நோய்களும் குறைபாடுகளும் எவ்வாறு நிகழ்கின்றன, எப்படிப்பட்ட தாக்கங்களை விளைவிக்கின்றன, அன்றாட வாழ்வில் இவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 
மூளையின் ஒவ்வொரு பாகம், நரம்பு மண்டலம் மூலம் அதன் செயல்பாட்டுத் தன்மை ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விநாடியும் 10 லட்சம் புதிய இணைப்புகளை மனித மூளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. கற்பனை, நுண்ணறிவு, ஆர்வம், இசை நாட்டம், முப்பரிமாண உணர்வு, இடது கை ஆதிக்கம் ஆகியவற்றுக்கு மூளையின் வலது அரைக்கோளம் காரணம். அறிவியல், எழுத்து, கணக்கு, பேச்சு, வலது கை ஆதிக்கம் ஆகியவற்றுக்கு மூளையின் இடது அரைக்கோளம் காரணம். 
நூல் முழுவதும் மூளை குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்துள்ளன. சுறுசுறுப்பான மூளைக்கும் நினைவாற்றலுக்கும் நல்ல தூக்கம் அவசியம். பதின்ம வயதில் குறைந்தபட்சம் 9 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல நினைவாற்றலுக்கு தேவையற்றவற்றை மறப்பது அவசியம். இரண்டு மொழிகளைக் கற்றுக் கொள்வது மூளைக்கு நல்லது. மறதி என்ற துடைப்பத்தை மூளை வைத்திருக்கிறது. இனிய நினைவுகளை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் பாரபட்சம் மனித மூளைக்கு இருக்கிறது. 
சத்தான உணவு, சமச்சீர் கல்வி, தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், இல்ல அமைப்பில் மாற்றம், தொழிலாளர் சந்தையில் உள்ள முன்னேற்றங்கள் போன்றவை மூளை வளர்ச்சியை முடிவு செய்கின்றன. கற்றுக்கொள்கின்ற திறனையும், புதிய சூழலுக்கு அனுசரித்துக் கொள்ளும் ஆற்றலையும் ஒருபோதும் மூளை இழப்பதில்லை. சூழலுக்கு ஏற்ப புதிய பின்னல்களை அதன் நெகிழித்தன்மை உருவாக்கிக் கொள்கிறது. குறிப்பாக பார்வையற்றோர் மற்ற புலன்களில் சிறந்து விளங்குகின்றனர். "நான் எனது 30 சதவீத ஆற்றலை பார்வைக்குப் பயன்படுத்தலாமே' என மூளை சிந்தித்து (!) மற்ற புலன்களில் புதிய நரம்புப் பாதைகளைக் கட்டமைப்பதால் இது சாத்தியமாகிறது. 
மூளை குறித்த கற்பிதங்களும் உண்மைகளும் நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது, மூளையை 10 சதவீதம்தான் பயன்படுத்துகிறோம் என்ற கருத்து தவறானது. ஏனெனில், உடல் ரீதியான பணிகளைச் செய்யும்போதும், மனரீதியாகச் செயல்படும்போதும் ஒட்டுமொத்த மூளையும் பல்வேறு வகைகளில் செயல்படுகிறது. 
மேலும், பயன்படுத்துதல் அல்லது இழத்தல் என்ற ரீதியில் மூளை செயல்படுவது உண்மை. உதாரணமாக, ஒருவர் வயலின் வாசிக்க கற்றுக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வயலின் வாசிக்க அவர் தினமும் பயிற்சி எடுக்கும்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மூளை பயிற்றுவிக்கப்படுகிறது. மூளையின் அதே சுற்று நியூரான்கள் மின் அதிர்வுக்கு உட்படுகின்றன. அதிக முறை அவை ஒன்றாக அதிர்வூட்டப்படும்போது அவற்றின் தொடர்பு வலுப்படுகிறது. திடீரென அந்தப் பயிற்சியை நிறுத்தினால், தொடர்புடைய நியூரான்களும் செயலிழந்து போகின்றன. எனவே, தசைகளையும் நியூரான்களையும் பயிற்சியே வலுப்படுத்துகிறது. 
குளுக்கோஸ் மூலம் சக்தியைப் பெற்று மூளை செயல்படுகிறது. மின் சக்தி மூலம் கணினி செயல்படுகிறது. நியூரான்கள் மூலம் சமிக்ஞைகளை மூளை அனுப்புகிறது. கேபிள்கள் மூலம் மின்சார சமிக்ஞைகளை கணினி அனுப்புகிறது. கணினியைப் போன்று மூளை பணியாற்றும் என்ற கருத்து உள்ளது. வெளிப்புறத் தூண்டலுக்கு உணர்ச்சியுடன் மூளை பணியாற்றும். உதாரணமாக, நாம் நடந்து செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்தால் விழுந்து அடிபடாமல் இருக்க தசைகளுக்கு சமிக்ஞைகளை அனுப்பி உதவுவது மூளை! இது கணினிக்குச் சாத்தியமில்லை. இவ்வாறு மூளை குறித்த பல்வேறு தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. 
மூளையைப் பற்றி விரிவாகவும் எளிமையாகவும் அறிவியல் படிக்காதவர்களுக்கும் போய்ச் சேரும் வகையிலும் எழுத வேண்டும் என்று சிந்தித்ததன் வெளிப்பாடுதான் இந்த நூல் என ஆசிரியர் இறையன்பு கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த நூலை ஒரே மூச்சில் வாசிக்க முயற்சி செய்வதைவிட அவ்வப்போது வாசித்து வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தினால் நூல் எழுதிய நோக்கம் நிறைவேறும் என்ற யோசனையையும் விருப்பத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். 
-ஜே.ரங்கராஜன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com