திரைக் கதிர்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் "மிஸ்டர் லோக்கல்'. ராஜேஷ் எம் எழுதி இயக்குகிறார். இந்த படம் மே முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டது.
திரைக் கதிர்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் "மிஸ்டர் லோக்கல்'. ராஜேஷ் எம் எழுதி இயக்குகிறார். இந்த படம் மே முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது மே இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்தின் சில காட்சிகளை ராஜேஷ் ரீ ஷூட் செய்து வருவதாகவும் அதனாலேயே படம் தாமதமாவதாகவும்   சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதேபோன்று பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் "தேவி 2'. இது "தேவி' படத்தின் இரண்டாம் பாகம். இந்த படமும் மே முதல் வாரத்தில் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இப்போது மே இறுதியிலே வெளியிடப்படுகிறது. இதற்குக் காரணம், சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் படத்தை தள்ளிப்போட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இயக்குநர்கள் பலரும் பாலிவுட் செல்வது வழக்கமாகிவிட்டது. சம்பளம், தகுதி என இயக்குநர்கள் தங்களின் பலத்தை நிருபிக்கவே பாலிவுட் செல்வதாகவும் சொல்லப்படுவதுண்டு. அந்த வரிசையில் அங்கு சென்ற பிரபுதேவா பெரும் வரவேற்பைப் பெற்றார்.   தற்போது அதில் இடம் பிடித்திருப்பவர் விஷ்ணுவர்தன். "அறிந்தும் அறியாமலும்', "பட்டியல்', "பில்லா', "ஆரம்பம்', "சர்வம்' போன்ற படங்களை இயக்கியவர், விஷ்ணுவர்தன். அடுத்து ஹிந்தி படம் ஒன்றை  இயக்குகிறார். கார்கில் வீரர் விக்ரம் பத்ரா வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட உள்ள இந்த படத்துக்கு, "ஷேர்ஷா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பத்ராவாக, சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இதை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். அடுத்து, அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் படம் இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதத்தில் அவர் பாலிவுட் படம் இயக்க மும்பை சென்றுள்ளார்.  

"தட்சமயம் ஒரு பெண்குட்டி' மலையாளப் பட படப்பிடிப்பில் இருந்தார் நித்யாமேனன். அவரைச் சந்திக்க சில தயாரிப்பாளர்கள் ஒன்றாக வந்தனர். முன் அனுமதி பெறாமல் சந்திக்க வந்தவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் நித்யா. கோபம் அடைந்த அவர்கள் நித்யாவுக்கு நடிக்க தடை (ரெட் கார்ட்) போடுவோம்  என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இதுபற்றி நித்யாவிடம் கேட்டபோது,""எனது தாய்க்கு கேன்சர் பாதிப்பு 3-ஆம் நிலையை எட்டி உள்ள தகவல் அறிந்து படப்பிடிப்பில் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு நடித்துவிட்டு ஓய்வு நேரத்தில் கேரவேனில் அமர்ந்து தாயை நினைத்து நான் அழுதுகொண்டிருக்கிறேன். க்ரானிக் மைக்ரேன் எனப்படும் தலைவலி பிரச்னையும் எனக்கு இருக்கிறது. அந்த நேரத்தில் சந்திக்க வேண்டும் என்றபோது என்னால் முடியவில்லை. எனக்குத் தடை போடுவார்கள் என்று வதந்தி வருகிறது. அதுபற்றி கவலைப்படமாட்டேன். என்னை ஈகோ நிறைந்தவள் என்று நினைத்தால் நினைத்துக்கொள்ளட்டும். நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்'' என்றார்.

சர்ச்சையான வகையில் பேசுவது, படங்களை எடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்வது இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு புதிது கிடையாது. என்டிஆர் பெயரில் உருவான படத்தில் பாலகிருஷ்ணா நடித்த நிலையில், அதற்கு எதிராக "லட்சுமியின் என்டிஆர்' என்ற படத்தை வர்மா இயக்கியுள்ளார். இந்த படத்தில் என்டிஆரின் மனைவி லட்சுமியை அவர் முன்னிலைப்படுத்தி கதை அமைத்துள்ளார். தேர்தல் சமயம் என்பதால் இந்த படத்தினை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. கடந்த வாரம் படம் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில்தான் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கடப்பா மாவட்டத்திலுள்ள 3 தியேட்டர்களில் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தியேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இணை கலெக்டர் உத்தரவின்பேரில் அந்த 3 தியேட்டர்களுக்கும் சீல் வைக்கப்பட்டதாக டோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் அனல் பறந்து கொண்டிருக்க பலரும் குளிர் பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் பலர் வெளிநாடுகளில் வாசம் செய்கின்றனர். மறுபுறம் வசூலை அள்ளிக் குவிக்கும் போட்டியுடன் பிரபலங்கள் நடித்திருக்கும் ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன. கடந்த 1-ஆம் தேதி கௌதம் கார்த்திக் நடித்த "தேவராட்டம்', 3-ஆம் தேதி அருள்நிதியின் "கே13' வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் அதர்வாவின் "100' வந்துள்ளது. விஷாலின் "அயோக்கியா', ஜீவாவின் "கீ' ஆகிய படங்களும் வந்துள்ளன. 16-ஆம் தேதி விஜய்சேதுபதியின் "சிந்துபாத்', 17-ஆம் தேதி சிவகார்த்திகேயனின் "மிஸ்டர் லோக்கல்', எஸ்.ஜே.
சூர்யா நடித்துள்ள "மான்ஸ்டர்' ஆகிய  படங்கள் வெளியாகின்றன. 21-ஆம் தேதி அஞ்சலி நடித்துள்ள "லிசா 2',  31-ஆம் தேதி சூர்யாவின் "என்ஜிகே', பிரபுதேவாவின் "தேவி 2', ஜெய் நடிக்கும் "நீயா 2' ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர விக்ரமின் "கடாரம் கொண்டான்', விமல் நடிக்கும் "களவாணி 2' படங்களும் வெளியாகவுள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com