தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி இடத்தில் இருந்தவர் அமலா. ரஜினி, கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்திய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். 1991-ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் வெளியான "கற்பூரமுல்லை' படம்தான் அமலா தமிழில் நடித்த கடைசிப் படம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப் பிறகு இப்போது அவர் மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.
கைதி' படத்துக்குப் பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சர்வானந்த் நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறது. ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார்.
இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.