பேல்பூரி

""என்னப்பா  சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கன்னு வித்தியாசமா எழுதி வச்சிருக்கே?''
பேல்பூரி


கண்டது

(வண்டாம்பாளையத்தில் ஒரு திருமண வாழ்த்து பேனரில்)

இது எங்க ய2 பங்சன்

 சி.முருகேசன், மாப்பிள்ளைக்குப்பம். 

(மானாமதுரை அருகில் உள்ள  ஒரு கிராமத்தின் பெயர்)

மறிச்சு கட்டி

இலக்கியா,  பாளையங்கோட்டை.

(நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு அருகே உள்ள கங்கணான்குளம் என்ற ஊரில் உள்ள துணிக்கடை விளம்பரத்தில்)

அழகு உங்களிடம்
ஆடை எங்களிடம்

எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்.


எஸ்எம்எஸ்

நாட்டையும், காட்டையும் காக்கும் மரங்கள்...
வெட்டப்பட்ட பின்
வீட்டைக் காக்கின்றன...
கதவுகளாய்.

எஸ்.மாரிமுத்து,சென்னை-64


கேட்டது

(சிதம்பரம் காசுக்கடைத் தெருவில்  ஒரு வீட்டின் முன்பு  நண்பர்களிருவர்)

""என்னப்பா  சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கன்னு வித்தியாசமா எழுதி வச்சிருக்கே?''
"" ஒட்டாதேன்னா எவன் கேக்குறான்? இப்ப இதைப் படிச்சுப் பார்த்துட்டு இந்த வீட்டுக்காரன் கிறுக்கன் போல... அப்படின்னு நெனச்சிட்டு ஒட்டாம போயிடுவான்''

ஆர்.அஞ்சனா தேவி, கந்தகுமாரன்.

(நாகர்கோவிலில் உள்ள ஒரு கோயிலில் ஒரு பக்தரும் அர்ச்சகரும்)

""ஏன் சாமி... விபூதியை இவ்வளவு வேகமாகவா கொடுப்பாங்க?  கொஞ்சம் மெதுவாக கொடுக்கக் கூடாதா?''
""இத்தனை பேருக்கும் நான் விபூதி தர வேண்டாமாக்கும்?''
""அதுக்கு இவ்வளவு வேகமாகவா?''
""அப்புறம் விபூதில உன்னை அலங்காரம் பண்ணிவிடச் சொல்றீயாக்கும்?''

 மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை.


மைக்ரோ கதை

நான்காம் வகுப்பில் ஆசிரியை நீதிபோதனை வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். 

""முதலில் உங்களைப் பிரியமாக வைத்திருக்கும் தாயை வணங்கணும். தாய்தான் முழு முதற் கடவுள். உங்களைக் காலையில் எழுப்பி விட்டு பல் தேய்க்கச் செய்து, குளிக்க வைத்து, உணவூட்டி, பகல் உணவு கொடுத்துவிட்டு, மாலை, இரவு எல்லாம் உங்களை வழிநடத்துபவர் அம்மா. 

எனவே அம்மாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் "அம்மாவே தெய்வம்'  என பத்துமுறை நீதி போதனை நோட்டில்  எழுதிக் காட்டுங்க. உங்கள் அம்மா மகிழ்ச்சி அடைவார்''  என்றார். 

எல்லா மாணவ-மாணவியர்களும் ஆசிரியை  சொன்னபடி எழுதிக் காட்டினார்கள். பாபு மட்டும் "ஆயாவே தெய்வம்'  என்று எழுதியிருந்தான். 
"" என்னடா பாபு இப்படி எழுதியிருக்கே?'' என்று கேட்டார் ஆசிரியை.

பாபு கண்கள் கலங்கச் சொன்னான்:  ""எனக்கு அம்மா இல்லீங்க டீச்சர்''

இரா.சிவானந்தம், கோவில்பட்டி. 


யோசிக்கிறாங்கப்பா!


மரங்களிலிருந்து இலைகள் உதிரலாம்.
பூக்கள் உதிரலாம்.
கிளைகள் ஒடியலாம்.
ஆனால் வேர்கள் எப்போதும் மரத்துடனே...
நல்ல நண்பர்கள் மாதிரி.

ஆ.கண்ணதாசன்,  சென்னை-87.

அப்படீங்களா!

உடல் எடை குறைய  என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன், குறையவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? "நன்றாகத் தூங்கிப் பாருங்களேன் உடல் எடை குறையும்' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

தூங்கும்போது உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன.  அதனால் உடல் எடை குறைய வாய்ப்புண்டு.  ஆனால் தூங்குவதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன. 

தூங்குவதற்கு முன்பு புரதச் சத்து உள்ள உணவை உட்கொண்டால் உடல் எடை குறையும்.  இரவு நேரத்தில்  இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தூங்கும் அறை வெளிச்சமின்றி இருட்டாக இருப்பது அவசியம்.  நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.  தூங்குவதற்கு  குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்பு எளிதில் செரிக்கக் கூடிய  உணவுகளை உண்ண வேண்டும். படுக்கப் போவதற்கு முன்பு நிறையத் தண்ணீர் குடித்தால் நன்றாகத் தூங்க முடியாது. சீரண உறுப்புகள், சிறுநீரகத்துக்கு வேலை கொடுத்தால், உடல் எப்படி ஓய்ந்திருக்கும்?  எப்படி நல்ல உறக்கம் வரும்?  நன்றாக உறங்க முயற்சி செய்யுங்கள்... உடல் எடை குறைவது மட்டுமல்ல... உடல் நலமும் மேம்படும்.

என்.ஜே., சென்னை-57.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com