தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் "நெய்' என்ற பெயரைக் கொண்டு அமைந்த ஊர்கள் சில:
நெய்வேலி, நெய்வே, நெய்வாசல், நெய்வாவித்துதி, நெய்க்குன்னம், நெய்குப்பை, நெய்தலூர், நெய்விளக்கு, திருவெண்ணெய் நல்லூர் முதலியன
"தமிழ் தாத்தா' எனப் போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன். வீட்டில் அவரை "சாமா' என்றே அழைத்தார்கள். அதையொட்டி அவரது ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சாமிநாதன் எனப் பெயரிட்டார். பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.
இந்தப் பெயர் மாற்றம் அவரது 18-ஆவது வயதில் நடந்தது.
ஓ ஹென்றி, ஜவஹர்லால் நேரு, செர்வாண்டிஸ், வால்டேர், ஆஸ்கார் ஒயில்டு - இவர்களிடையே உள்ள ஒற்றுமை ?
இவர்கள் அனைவருமே சிறையில் இருந்தபோது எழுதியவர்கள்.
- முக்கிமலை நஞ்சன்
நாயக்க மன்னர்களின் காலத்தை நிலைக்களமாக வைத்து எழுதப்பட்ட "மோகனாங்கி' என்ற நாவலே தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல். வெளியான ஆண்டு 1895. இதை எழுதியவர் இலங்கையைச் சார்ந்த தி.த. சரவணமுத்துப் பிள்ளை.
எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.
அதிசயம் ஆனால் உண்மை!
நாமெல்லாம் பல் துலக்கும்போது எச்சில் துப்புவோம். அதில் பற்பசை நுரையுடன் பல்லில் படிந்த அழுக்குகளும் வெளியே தள்ளப்படும். ஆனால் விண்வெளி வீரர்கள் பல் துலக்கினால் எச்சிலைத் துப்ப முடியாது. அப்படியே விழுங்கி விட வேண்டியதுதான். அல்லது ஒரு துண்டு துணிக்குள் துப்பி எடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அப்படியில்லாமல், சும்மா வெளியே துப்பித் தொலைத்தால் ஈர்ப்பு விசையற்ற விண்வெளியின் அறை எங்கும் அந்த எச்சில் மிதந்து கொண்டிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.
பெங்களூரு சென்ட்ரல் ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பையன் சமந்த், ஓர் ஓவியப் போட்டியில் முதல் பரிசாக ஒரு கணிசமான தொகையை பரிசாக பெற்றான். அந்தப் பரிசை வைத்து அவன் தனக்காக எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. பள்ளிக்காக 50 மரக்கன்றுகள் வாங்கி பள்ளியில் நட்டான். துணை கமிஷனர் ராமச்சந்திரன் அவரைப் பாராட்டி திரும்பவும் அதே தொகையை அவனுக்கு பரிசாக தந்தார்.
- கே.ராமச்சந்திரன், பெங்களூரு.