காலை எட்டு மணி. அவசர அவசரமாய் ஆபிசுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் ராகவன். சமையலறையிலிருந்து மனைவியின் குரல்.
"என்னங்க... அரிசி தீர்ந்துபோச்சு. சாயங்காலம் வரும்போது அரிசிக் கடையிலே சொன்னா வீட்டுல கொண்டுட்டு வந்து போட்டுடுவாங்க''
ராகவனுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது.
"ரெண்டு நாளைக்கு முன்னாடி இதைச் சொல்லக் கூடாதா? கடைசி நேரத்திலேதான் சொல்வியா? அறிவு இருக்கா? இல்லையா?''
கோபத்தில் கத்திவிட்டு, வீட்டுக்கு வெளியே வந்து பைக்}ஐ ஸ்டார்ட் செய்தான். பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போதுதான் பைக் இரண்டு நாளாய் ரிசர்வில் ஓடியது ஞாபகத்துக்கு வந்தது. பெட்ரோல் தீர்ந்துவிட்டது.
வெளியே வந்து அவனைப் பார்த்த மனைவி, "என்னங்க வண்டி ஸ்டார்ட் ஆகலையா?'' என்று கேட்டாள்.
"என்ன பிரச்னைன்னு தெரியலை...''
வார்த்தைகளை மென்று விழுங்கினான் ராகவன்.
பால் ராமமூர்த்தி, அம்பாசமுத்திரம்.