வதை

"குக்கூ ... குக்கூ ...' சீனா கடிகாரம் எழுப்பிய உரத்த குரல் கேட்டு கண் விழித்தான் பிரபு. கீதா, "மணி ஐந்தாயிட்டுதா ?''" என்றாள் கண்களைத் திறக்காமலே. 
வதை

"குக்கூ ... குக்கூ ...' சீனா கடிகாரம் எழுப்பிய உரத்த குரல் கேட்டு கண் விழித்தான் பிரபு. கீதா, "மணி ஐந்தாயிட்டுதா ?''" என்றாள் கண்களைத் திறக்காமலே. 
"ஆமாம். நான் போய் வர்த்தினியை எழுப்புகிறேன். நடன வகுப்புக்கு போய்ட்டு வந்து குளிச்சிக்கிடறோம். காஃபி வழியில் குடிச்சுக்கிறேன். வெளியே பூட்டிட்டு சாவியைக் கையில் கொண்டு போயிடறேன்''
"இன்னைக்கு புதன்கிழமைல்ல. ஏழு மணிக்கு மியூசிக் வகுப்பும் உண்டு" கீதா படுக்கையில் இருந்து எழாமலே பதில் கொடுத்தாள்.
பிரபு வர்த்தினி படுத்திருந்த அறைக்குச் சென்று கதவைத் திறந்து நுழைந்தான். வர்த்தினி கழுத்து வரை போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். பிரபு அருகில் சென்று மெதுவாக குரல் கொடுத்தான். " 
"குட்டிம்மா எழுந்திரு. டான்ஸ் க்ளாஸ் போகணுமில்ல" வர்த்தினி எழவில்லை. இரவு வெகுநேரம் உட்கார்ந்து படித்த அசதி. "
"தூக்கமா வருதுப்பா. கொஞ்ச நேரம் கழிச்சு எழுந்திருக்கவா?" என்றாள் மெல்லிய குரலில்.
"மணி ஐந்தாயிடுச்சு. இப்போ எழுந்தாத்தான் ஐந்தரை மணிக்கு டான்ஸ் க்ளாஸிற்குப் போக முடியும். ஏழு மணிக்கு ம்யூசிக் க்ளாஸ் வேற போகணும். அப்புறம் வந்து ஸ்கூலுக்கு போகணும். எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு ஞாயிற்றுக்கிழமை பத்து மணி வரை தூங்கலாம், குட்டிம்மாவும் , அப்பாவும். சரியா ? " 
சரியாக தூக்கம் கலையாமல் எழுந்து குளியல் அறை நோக்கி நடந்த எட்டு வயது வர்த்தினியைப் பார்க்கையில் பிரபுக்கு மனம் சங்கடப்பட்டது. வர்த்தினி தயாராவதற்குள் அவனும் குளியலறைக்குச் சென்று தயாராகி உடைகளை மாற்றிக் கொண்டான். மீண்டும் வர்த்தினியின் அறைக்கு வந்தபோது வர்த்தினி
தயாராக இருந்தாள். 
அதிகாலை என்பதால் சாலையில் போக்குவரத்து அதிகமில்லை. பத்தே நிமிடங்களில் நடனப் பள்ளியை அடைந்து விட்டது கார். வர்த்தினியை உள்ளே அனுப்பிவிட்டு அருகில் இருந்த தேநீர் கடைக்குச் சென்று சூடாக காஃபி சாப்பிட்டுவிட்டு வாகனத்தை அருகில் இருந்த மரத்தின் நிழலில் நிறுத்தி இருக்கையில் சாய்ந்தவாறே தூங்கி விட்டான்.
"அப்பா, போகலாமா ?" வர்த்தினியின் குரல் கேட்டதும் விழித்துக் கொண்டு முன் கதவைத் திறந்து விட்டான். வர்த்தினி ஏறிக் கொண்டாள். 
வீட்டையடைந்து இருவரும் குளித்துவிட்டு கீதா பரிமாறிய இட்லிகளைச் சாப்பிட்டு முடித்தபோது மணி ஆறே முக்கால். மீண்டும் பயணித்து நடன வகுப்பை அடைந்தபோது மணி ஏழு. வர்த்தினி அவசரமாக உள்ளே போனாள். பிரபு நிழல் பார்த்து வாகனத்தை நிறுத்தினான். கைபேசி அழைத்தது.
"ஹலோ... மிஸ்டர் பிரபுவா ? நான் இயக்குநர் ராம் சங்கர் பேசறேன். இப்ப பண்ணிக்கிட்டு இருக்கிற படத்தில ஒரு சின்ன குழந்தை பாத்திரம். உங்க மகள் ஞாபகம் வந்துச்சு. இன்னைக்கு சூட்டிங் இருக்கு. வர முடியுமா ? மகாபலிபுரம் போற வழியில கடற்கரை ஸ்பாட். மத்தியானம் ஒரு மணிக்கு அங்கே இருந்தால் போதும். நல்ல ரோல். நல்லா பண்ணுவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு" 
"ஓ... நன்றி சார். முன்னதாகவே வந்து விடுகிறோம்'' என்றான். இயக்குநர் இடம் குறித்து சரியான அடையாளங்களைச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். பிரபு கைபேசியில் கீதாவை அழைத்தான். கீதாவின் குரலிலும் பரபரப்பு. 
"பள்ளிக்கூடத்திற்கு போன் செய்து விடுமுறை சொல்லிவிடு. வகுப்பு முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்திடறோம். கொஞ்சம் முன்னாடியே கிளம்பிப் போயிடலாம். நீயும் தயாராக இரு. வழியில சாப்பிட்டுக்கிடலாம்''
வகுப்பு முடிந்து வர்த்தினி வந்ததும் விஷயத்தைச் சொன்னான். வர்த்தினியின் முகத்தில் மகிழ்ச்சியும் குழப்பமும். " 
"அப்ப ஸ்கூல்?''
"லீவ் சொல்லிடலாம்'' சொல்லியவாறே வாகனத்தைக் கிளப்பினான். 
வர்த்தினி அடையப்போகும் உயரம் குறித்து கற்பனைகளில் மிதந்தவாறே வாகனத்தை ஓட்டினான். வர்த்தினி முதல் வகுப்பு படிக்கையில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் அவள் ஆடிய தனி நடனம்தான் எல்லாவற்றிற்குமே ஆரம்பம். பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டும் அளவிற்கு அழகாக ஆடினாள். இன்னொரு விழாவில் பாடியபோதும் அதே அளவிற்கு வரவேற்பு. பிரபுவும் கீதாவும் அவளை நடன வகுப்பு, இசை வகுப்பு எனச் சேர்த்துவிட அவளது திறமை மெருகடைந்து கொண்டே போனது. பள்ளியில் மட்டுமில்லாது வெளி இடங்களிலும் அவளது திறமை வெளிப்பட ஆரம்பித்ததும், எதிர்பாராமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியதும், தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவளுக்கு வாய்ப்புகள் கிடைத்ததும்... எல்லாமே ஒரு கனவு போலத் தொடர்ந்தன. முத்தாய்ப்பாக சில மாதங்களுக்கு முன் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக வந்த இயக்குநர் ராம் சங்கர் வர்த்தினியின் திறமையைப் பாராட்டியதோடு , தனது அடுத்த படத்தில் குழந்தைப் பாத்திரத்தில் அவளுக்கு வாய்ப்பு உண்டு என்று உறுதி அளித்தார். இயக்குநரின் வாக்குறுதி இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என எதிர்பார்க்கவில்லை.
வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள் கீதா. வர்த்தினியை வாரி அணைத்து முத்தமிட்டாள். 
"லீவ் சொல்லிட்டியா ?" 
"தலைமை ஆசிரியரிடமே பேசி விட்டேன். உடனே சரி சொன்னதும் இல்லாமல் வர்த்தினிக்கு வாழ்த்துகளையும் கூறினார்"
இயக்குநர் சொன்ன இடத்திற்குப் போக இரண்டு மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டு சற்று முன்னதாகவே கிளம்பினார்கள்.
அந்த இடம் ஒரு படப்பிடிப்பிற்கு தயாராவதற்கான பரபரப்பில் இருந்தது. இரவு அடித்த பனிக்கு மாறாக மதியப்பொழுது சூரியன் கொதித்துக் கொண்டிருந்தான். ஒரு குடையின் கீழ் உட்கார்ந்திருந்த இயக்குநருக்கு பிரபுவும் , கீதாவும் வணக்கம் வைத்தார்கள். இயக்குநர் புன்சிரிப்போடு பதில் வணக்கம் சொன்னார். " "வாம்மா ... வருங்கால சூப்பர் ஸ்டார்'' என்று புன்னகைத்தார். பக்கத்தில் இன்னொரு குடையின் கீழ் கதாநாயகிக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள். " 
"ஹீரோ இப்போ வந்திடுவார். வந்ததும் ஆரம்பிச்சிடலாம். சாப்பிட்டீங்களா ?" 
பிரபு ஆமென்று தலையாட்டினான். மூவருக்கும் குளிர்ச்சியான பானம் கொடுத்தான் சிறுவன் ஒருவன். மூவரையும் தன் அருகிலேயே உட்கார வைத்துக் கொண்டார். 
"தன்யா... பாப்பா ரொம்ப சூட்டிகை. நீயேதான் பார்க்கப் போறியே" கதாநாயகி புன்னகை செய்தாள்.
"பாப்பா... சீன் என்னான்னு சொல்றேன். கேட்டுக்க. அதோ அந்த அம்மாதான் உன்னோட சித்தி. உன்னைப் பிடிக்காது. உங்க அப்பா , அதாவது சினிமா அப்பா... நம்ம ஹீரோ, சித்தி, நீ மூன்று பேரும் பிக்னிக் வந்திருக்கீங்க. உன்னோட விருப்பமான பூனைக் குட்டியையும் நீ சித்திக்குத் தெரியாமல் ஒரு கூடையில வச்சு கொண்டு வந்திருக்கே. சித்திக்கு உன்னையும் பிடிக்காது, அந்த பூனைக் குட்டியையும் பிடிக்காது. அது திடீர்னு சத்தம் கொடுத்ததும் சித்திக்கு தெரிஞ்சு உன்னைத் திட்டுறா. கூடையைத் திறந்து பூனைக்குட்டியை விரட்டி விடுகிறாள். சூடான மணலில் பூனைக்குட்டி கத்தியவாறே ஓடுகிறது. நீயும் அதன் பின்னாலேயே ஓடறே. அவசரத்தில செருப்பு கூட போடாம ஓடறே. சூடு தாங்காமல் வெளிப்படற வலியை உன் முகத்தில் காட்டணும். ரொம்ப இயற்கையா இருக்கணும். ரொம்ப தூரம் ஓடுனப்புறம் அதைப் பிடிச்சிடுறே. வாரித் தூக்கி முகத்தோடு வச்சு அணைச்சுக்கிறே. அப்ப உன் மகிழ்ச்சியை அப்படியே பார்க்கிறவங்க உணர்கிற மாதிரி காட்டணும். ஜமாய்ச்சுடணும்'' " இயக்குநர் வலியையும் , மகிழ்ச்சியையும் தன் முகத்தில் உருவாக்கிக் காட்டியதை வர்த்தினி ஆச்சரியமாகப் பார்த்தாள். இவ்வளவு உணர்ச்சிகளைத் தன்னால் வெளிப்படுத்த முடியுமா என்று யோசித்தாள். இயக்குநர் ஒப்பனைக்காரர் ஒருவரிடம் வர்த்தினிக்கு ஒப்பனை செய்யச் சொன்னார்.
தூரத்தில் ஓர் ஆள் கையில் ஒரு பூனைக்குட்டியோடு நின்று கொண்டிருந்தான். வெள்ளை நிறத்தில் "புசு புசு'வென்று முடியோடு இருந்தது. மின்னும் கண்கள். அதைப் பார்க்கையில் வர்த்தினிக்கு ஓடிச் சென்று அதை வாங்கி கையில் வைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. "கெட்டிக்கார பூனைக்குட்டிம்மா. அந்த ஆள் சொல்றா மாதிரி கேட்கும். இதோட நாற்பது படத்திற்கு மேல நடிச்சிருக்கு" 
திடீரென்று இடம் பரபரப்பானது. விலை உயர்ந்த வெளிநாட்டுக்கார் ஒன்று வந்து நின்றது. கதவைத் திறந்து கதாநாயகன் இறங்கினார். ஏற்கெனவே ஒப்பனை செய்து "பள பள'வென்று இருந்தார். இயக்குநர் தவிர உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். கதாநாயகன் நேராக இயக்குநரின் அருகில் வந்து காலியாக கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார்." 
"சார், நாலு மணிக்கு கிஷோர்குமார் பட ஷூட் இருக்கு. சட்டுன்னு முடிச்சு அனுப்பிடுங்க" 
இயக்குநர் பலரைக் கூப்பிட்டு ஏதேதோ சொன்னார். ஒளிப்பதிவாளர் காமிராவைத் தயார் நிலைக்கு கொண்டு வந்தார். இயக்குநர் காட்சி குறித்து மற்றவர்களுக்கும் விளக்கினார். 
படப்பிடிப்பு ஆரம்பமானது. கதாநாயகன் , நாயகி, வர்த்தினி மூவரும் கதாநாயகன் வந்த காரில் இருந்து இறங்குகிறார்கள். வர்த்தினி கையில் பூனைக்குட்டி இருந்த கூடை. கதாநாயகன் காரில் இருந்து பெரிய குடை ஒன்றை எடுத்து மணலில் குத்தி நிறுத்துகிறான். கதாநாயகி காரில் இருந்து சாப்பாட்டுக்கூடை , குளிர்பான பாட்டில்கள் எல்லாம் எடுத்து மணல் தரையில் பரப்புகிறாள்.
"சிந்து .... நைஸ் ப்ளேஸ் இல்லே" 
"ஆமா டார்லிங். இயற்கை எப்பவுமே அழகுதான்'' " கதாநாயகியின் தமிழில் ஆங்கில வாடை.
"ப்ரவீனாக்குட்டி , கடல் எவ்வளவு அழகா இருக்கு பாரு. அலைகள் எப்படி கரையில வந்து மோதுது"
"ஆமா டாடி. ரொம்ப நல்லா இருக்கு. கடல் பக்கமாப் போய் அலைகள் காலில படற மாதிரி நிற்கலாமா ?''
வர்த்தினி இயக்குநர் சொன்ன மாதிரியே உச்சரித்தாள். இயக்குநர் பிரபு பக்கம் திரும்பி திருப்தி கலந்த புன்னகையைப் பரிமாறினார். 
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பூனைக்காரன் மெல்லிய குரலில் ஏதோ கூற , அதுவரை கூடைக்குள் இருந்த பூனைக்குட்டி மெல்லியதாக இரு தடவைகள் "மியாவ்...'' " என்று குரல் கொடுத்தது. கதாநாயகி கோபத்தோடு வர்த்தினியின் கையில் இருந்த கூடையைப் பிடுங்கினாள். " "எத்தனை தடவைச் சொன்னாலும் கேட்க மாட்டியே நீ. இந்தச் சனியனையும் எனக்குத் தெரியாமல் தூக்கிட்டு வந்திட்டியா?''
கோபத்தோடு வர்த்தினியைப் பார்த்து முறைத்தாள். 
பின்னர் கூடையைத் திறந்து பூனைக்குட்டியைத் தூக்கி வெளியே போட்டாள். மணலில் கலந்து கிடந்த சிறு கற்களைப் பொறுக்கி அதன் மீது எறிந்தாள். பூனைக்குட்டி பயந்து மணலின் சூடு தாங்காமல் அலறியவாறே ஓடியது. வர்த்தினிக்கு உண்மையிலேயே பாவமாக இருந்தது. "சட்'டென்று எழுந்தவளின் கையைப் பிடித்து இழுத்தாள் கதாநாயகி. 
வர்த்தினி தன் கையை உருவிக் கொண்டு பூனைக்குட்டியின் பின் ஓடினாள். மணலின் அதீத சூடு செருப்பு போடாத அவள் கால்களைப் பொசுக்கியது. சூடு தாங்காமல் கால்களை மாற்றி மாற்றி உதறியவாறு ஓடினாள். முகத்தில் கால்களைப் பொசுக்கிய சூட்டின் வலி தெரிந்தது. சிறிது தூரம் ஓடியதும் நின்று கால்களை மாற்றி மாற்றி தூக்கி கைகளால் தடவிக் கொண்டாள். முழுப் பாதங்களும் மணலில் பதியாதவாறு விரல் நுனிகளை மட்டும் ஊன்றி ஓடினாள். பூனைக்குட்டிக்கும் சூட்டின் வலி. அதுவும் வலியோடு கத்தியவாறே ஓடிக் கொண்டிருந்தது. இயக்குநர் பிரபுவை பார்த்து விரல்களைக் காட்டினார்.
"க்ளாஸ் ... ! '' பிரபுவுக்கும் , கீதாவுக்கும் உள்ளுக்குள் பெருமிதம். 
வர்த்தினி பூனைக்குட்டியை நெருங்கப் போகும்போது வேகமாக வந்த வேன் ஒன்று அங்கு வந்து நின்றது. மூன்று பேர்கள் இறங்கி நேராக இயக்குநரிடம் போனார்கள். வந்தவர்களில் ஒருவர் இளம் வயதுப் பெண். மூவருமே இயக்குநரிடம் ஏதோ கோபமாகப் பேசினார்கள். தூரத்தில் இருந்ததால் வர்த்தினிக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை. இயக்குநரும் அவர்களிடம் ஏதோ கூறினார். படப்பிடிப்புக் குழுவினரும் அந்த இடத்திற்கு வந்து சூழ்ந்து கொண்டனர். 
இயக்குநர் ஒளிப்பதிவாளரை நோக்கி ஏதோ சொல்ல அவரும் காமிராவை நிறுத்திவிட்டு அங்கே போனார். வர்த்தினியையும் வந்து விடுமாறு கை காட்டினார் இயக்குநர். ஏற்கெனவே மணலின் சூட்டால் கொப்பளிக்கத் தொடங்கியிருந்த கால்களின் வலி பொறுக்காமல் அவள் ஓடி வந்து குடைக்குள் நின்று கொண்டாள். அவளது முகத்தைப் பார்த்ததும் அவள் வலி புரிந்த பிரபு அவளைத் தூக்கிக் கொண்டான். கீதா வர்த்தினியின் மெல்லிய பாதங்களை வருடி விட்டாள். ஏற்கெனவே ஏற்பட்டிருந்த கொப்புளங்களில் கை பட்டதும் வர்த்தினிக்கு வலி தாங்காமல் அழுகை வந்து விட்டது. பிரபு கைக்குட்டையை நனைத்து பாதங்களில் ஒத்தடம் கொடுத்தான். பூனைக்காரன் பூனைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து நின்றான்.
வேனில் வந்த பெண் அவனிடம் இருந்து பூனைக்குட்டியைப் பிடுங்கி வேனின் பின் பக்க இருக்கையில் வைத்து விட்டு அவளும் ஏறிக் கொண்டாள். பூனைக்காரன் அவளிடம் சென்று கெஞ்சுவது போல ஏதோ பேசினான். அவள் அவனை மிரட்டுவது போலப் பேசி விரட்டி விட்டாள். 
வேனில் வந்த இன்னொருவர் சில காகிதங்களை இயக்குநரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார். முதலில் மறுத்த இயக்குநர் பின்னர் கையெழுத்திட்டார். பூனைக்காரரிடமும் கையெழுத்து வாங்கிய பின்னர் இன்னும் சிலரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்ட பின் இயக்குனரிடம் ஏதோ ஆங்கிலத்தில் கூறிவிட்டு வேனில் ஏறிப் புறப்பட்டனர். பூனைக்காரன் அழாத குறையாக வேனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"சாரி .... இப்படி ஓர் இடைஞ்சல் வரும்னு எதிர்பார்க்கல. என்ன பண்றதுன்னு யோசிச்சு அப்புறம் சொல்றேன்" இயக்குநர் எல்லாரிடமும் சொல்வதைப் போலப் பொதுவாகப் பேசினார். நாயகனும், நாயகியும் அவரவர் கார்களில் ஏறி உடனே கிளம்பி விட்டார்கள். 
இயக்குநர் பிரபு பக்கம் திரும்பினார். "
"சாரி, எதிர்பாராத இடைஞ்சல். குட்டியோட முகபாவம் , நடிப்பு எல்லாமே ரொம்ப இயற்கையாக பிரமாதமாக இருந்தது. எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிடானுங்களே இவனுக. நான் திரும்பக் கூப்பிடறேன். இதை அட்வான்ஸாக வச்சுக்குங்க'' " பிரபுவின் கையில் உறை ஒன்றைக் கொடுத்தார். வர்த்தினியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டி "பிரமாதமாக வருவம்மா'' என்றார்.
பிரபு காரில் ஏறினான். வர்த்தினியைத் தூக்கிக் கொண்டு கீதாவும் ஏறிக் கொண்டாள். கைக்குட்டையால் பாதங்களை வருடிக் கொடுத்தாள். 
"ரொம்ப வலிக்காம்மா ?" பிரபுவின் குரல் கம்மியிருந்தது. 
"ஆமாப்பா .... ரொம்ப சூடு மணல். பாவம் இல்ல. எனக்கே இப்படி இருந்தால் அந்த பூனைக் குட்டிக்கு எப்படி இருந்திருக்கும்" 
மீண்டும் அவள் விழித்தபோது வாகனம் அவளது பள்ளியைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. வளாகத்துக்குள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். உற்சாகமான குரல்கள் நகரத்தின் இரைச்சல்களையும் மீறி ஒலித்தன. 
வர்த்தினி முன் பக்கம் சாய்ந்து பிரபுவின் தோளைத் தொட்டாள். " 
"அந்த பூனைக்குட்டியை ஏம்பா தூக்கிட்டுப் போனாங்க. அவங்கள்லாம் யாருப்பா ?"
"அவங்கல்லாம் மிருக வதை தடுப்பு இயக்கக்காரங்கம்மா. மிருகங்களைக் கொடுமைப்படுத்தினால் அதைத் தடுக்க சட்டம் இருக்கு. அதனால மிருகங்
களைக் கொடுமைப் படுத்தறது தெரிஞ்சால் அவங்க வந்து அந்த மிருகங்களை காப்பாற்றிக் கூட்டிட்டுப் போய் ஓரிடத்தில வச்சு வளர்ப்பாங்க. கொடுமைப் படுத்தினவங்க மேல வழக்கு போட்டு தண்டனையும் கொடுப்பாங்க. எஸ் பி ஸி ஏ ன்னு சொல்லுவாங்க" 
வர்த்தினி பின்னால் சாய்ந்து கொண்டு ஏதோ யோசிப்பதுபோல இருந்தாள். பின்னர் மீண்டும் முன்னால் குனிந்தாள். 
"ஏம்பா.... மிருகங்களை வதை பண்ணினால் மட்டும்தான் அவங்க தடுப்பாங்களா? அந்த சட்டம் மிருகங்களை வதை பண்றதை மட்டும்தான் தடுக்குமா?" 
பிரபு சட்டென்று வாகனத்தின் வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தினான். வர்த்தினியின் கேள்வி அவனையும் கீதாவையும் உறைந்து போக வைத்திருந்தது. 
"ஆமாம்மா .... அப்புறம் நாளையில இருந்து நீ எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் போக வேண்டாம். காலையில மெதுவா எழுந்திருச்சு பள்ளிக்கூடம் போனால் போதும். மற்றது எல்லாம் மெதுவாக் கத்துக்கலாம். நாளைக்கு இந்த பணத்தையும் திருப்பிக் கொடுத்திடலாம். சினிமால்லாம் இப்ப வேண்டாம்''" பிரபு மீண்டும் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான். கீதா வர்த்தினியின் பாதங்களைத் தன் மடியில் வைத்து வருடிக் கொடுத்தவாறே வந்தாள். வர்த்தினியின் முகத்தில் வலி குறித்த அறிகுறிகள் காணாமல் போயிருந்தன.

தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி - 2019
ரூ.1,250 பரிசு பெறும் - ஆறுதல் பரிசு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com