திரைக்கதிர்

சமந்தா, ரகுல் ப்ரீத், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடற்கட்டை கட்டுகோப்புடன் வைத்திருக்கிறார்கள்.
திரைக்கதிர்

• சமந்தா, ரகுல் ப்ரீத், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடற்கட்டை கட்டுகோப்புடன் வைத்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் நடிகை அலியாபட் இணைந்திருக்கிறார்.
"பாகுபலி' படத்தையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் "ஆர்ஆர்ஆர்' சரித்திர படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். கதாநாயகியாக அலியா பட் அறிமுகமாகிறார். 
"பாகுபலி' யில் பிரபாஸ், ராணா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடற்கட்டை சிக்ஸ்பேக் தோற்றத்துடன் கட்டுமஸ்தாக மாற்றிக் கொண்டனர். அதற்காக கடுமையான பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தற்போது நடிக்கும் ராம் சரண், ஜூனியர் என்டிஆரும் கடுமையான பயிற்சிகள் மூலம் உடற்கட்டை கட்டுமஸ்தாக்கியிருக்கின்றனர். இவர்களுடன் நடிக்கும் அலியாபட்டும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதால் அவரையும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளச் சொல்லி இயக்குநர் சொல்லியிருந்தார். அதை ஏற்று கடந்த சில மாதங்களாக கடுமையான பயிற்சிகளில் அலியா பட் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் 70 கிலோ எடையைத் தூக்கி பயிற்சி செய்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். 

• அஜித் நடித்த "தீனா' படத்தை இயக்கி தமிழில் அறிமுகமானவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்திலேயே பெரும் கவனம் பெற்ற ஏ.ஆர். முருகதாஸ், அடுத்தடுத்து படங்களிலும் தன்னை நிரூபித்துக் கொண்டே வந்தார். "கஜினி', "7-ஆம் அறிவு', "துப்பாக்கி' என ஒவ்வொரு படத்திலும் விஸ்வரூபம் எடுத்தார். "கஜினி' படத்தின் மூலம் பாலிவுட் சென்ற பின்னர் இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இயக்குநராக மாறினார். இந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக வலம் வரும் முருகதாஸ், பெரும் இடைவெளிக்குப் பின் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குச் செல்கிறார். 
ரஜினி நடிப்பில் "தர்பார்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் பொங்கலுக்குத் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கு செல்ல முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். சிரஞ்சீவி நடிப்பில் ஸ்டாலின், மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படங்களை இதற்கு முன் தெலுங்கில் இயக்கி இருந்தார் முருகதாஸ்.
அடுத்து, ஜூனியர் என்டிஆர் அல்லது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க அவர் விரும்புகிறாராம். இதற்கான கதை உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

• "தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. பாலிவுட் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், நடிகர் நாணா படேகர் மீது "மீடூ' புகார் பிரச்னையை எழுப்பினார். 
இது குறித்து அவர் அளித்த புகார் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியது. தனுஸ்ரீயை தொடர்ந்து பல்வேறு நடிகைகள் தங்கள் மீது நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகக் கருத்துக்களைத் தெரிவித்தனர். தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் அது எதிரொலித்தது. மீடூ விவகாரம் ஓரளவுக்கு ஓய்ந்திருக்கும் நிலையில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வருவதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று வந்த அவர், தற்போது மும்பையிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். ஜனவரிக்குப் பின் படங்களில் தொடர்ச்சியாக நடிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. 
"மீடூ' புகாரில் சிக்கியவர்கள் நடிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை தன்னைத் தேடி வரும் இயக்குநர்களிடம் நிபந்தனையாகவே வைத்து வருகிறார் தனுஸ்ரீ தத்தா.

• கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படத்தில் தனுஷ் நடிக்கிறார். "பேட்ட' படத்துக்கு முன் "இறைவி' படத்தை இயக்கி வந்த போதே, தனுஷ் படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தம் ஆனார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், திடீரென்று ரஜினியின் "பேட்ட' படத்தை இயக்க வேண்டிய சூழல் இருந்ததால், அந்த படம் தள்ளிப் போனது. இதனால் இந்த இருவரின் கூட்டணி இணையவில்லை. தற்போது இவர்கள் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 
சமீபத்தில் தனுஷ் படத்துக்கு உருவாக்கப்பட்ட கதையை மீண்டும் புதுமெருக்கேற்றியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இதுவொரு கேங்ஸ்டர் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது. இந்தநிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் ரதிந்திரன் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளார். மேலும் பயங்கர த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு உதகையில் தொடங்கியுள்ளது.

• தமிழ் சினிமாவுக்கும், மலையாளப் பெண்களுக்கும் அத்தனை ஈர்ப்பு. எத்தனை பேர் வந்தாலும் இங்கே பிரபலமாகி விடுவது அவர்களின் தனிச்சிறப்பு. ரஜினி நடித்த "பேட்ட' படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தமிழ் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு சினிமாப் பக்கமும் கவனத்தைத் திருப்பியிருக்கிறார். சமீபத்தில் இமயமலைக்குச் சென்றவர், அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளார். "இமயமலையில் நம்மைச் சுற்றி நிலவும் நிசப்தம் நம்முடையது அல்ல. அது இமயத்தின் நிசப்தம்'' என குறிப்பிட்டிருப்பதுடன், "என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் ஓணம் கொண்டாட்டத்துக்காக அணியும் பாரம்பரிய சேலையின் மீதிருக்கும் மோகம் எனக்கு என்றைக்கும் மாறாது'' எனத் தெரிவித்திருக்கிறார். ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சேலை அணிந்து அவர் அளித்திருக்கும் கவர்ச்சி போஸ் ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறது. "பாரம்பரியச் சேலையிலும் இப்படியான கவர்ச்சியை அளிக்கலாம் என உணர்த்திய தங்களுக்கு நன்றி' என ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com