பலருக்கு பழங்காலத்துப் பொருள்களை சேகரித்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு. அது வருங்கால சந்ததியினர் முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்திய பொருள்கள் குறித்து தெரிந்து கொள்ள பயன்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ளகே.ராஜராஜன் நான்குதலைமுறைகளாக, நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், மன்னர் காலத்தில் பயன்படுத்திய பல பொருள்கள், அகழாய்வில் கிடைத்த பொருள்கள், ஓடுகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருள்களைச் சேகரித்து வைத்துள்ளார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""எனது தந்தை காளிராஜன், அவரது தந்தை அய்யன், அவரது தந்தை பாபனாசம், தற்போது நான் என நான்கு தலைமுறைகளாக பொருள்களைச் சேகரித்து வைத்துள்ளோம். எனது முன்னோர்கள் வியாபார விஷயமாக தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் பல மாநிலங்களுக்குச் சென்று வந்துள்ளனர். அப்போது பல பொருள்களை விலைக்கு வாங்கி சேகரிக்கத் தொடங்கினார்.
எனது தந்தை கும்பகோணம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் பழைய இரும்பு வியாபாரிகளிடம் தொடர்பு வைத்திருந்தார். பழைய இரும்புக் கடைக்கு எதாவது பழங்காலப் பொருள்கள் விற்பனைக்கு வந்தால் அந்த கடைக்காரர் எனது தந்தைக்கு தகவல் கொடுப்பார். பின்னர் எனது தந்தை நேரில் சென்று வாங்கி வருவார். நானும் இந்த பாணியைப் பின்பற்றுகிறேன். இப்படியாக நான்கு தலைமுறைகளாக நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் என சேகரித்து வைத்துள்ளோம். இப்போது இந்த பொருள்களை விருதுநகர் மாவட்டம், மதுரை, பழனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களுக்குச் சென்று பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சி நடத்தி வருகிறேன். இதன்மூலம் தற்போதைய தலைமுறையினர் பழங்கால வாழ்க்கை முறை மற்றும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்போது என்னிடம் இந்தியாவில் முதன்முதலாக அச்சிடப்பட்ட, அதாவது கி.மு.600 ஆம் ஆண்டு ஆட்சி செய்த சந்திரகுப்தமெளரியர் காலத்தில் அச்சிடப்பட்ட வெள்ளிநாணயம் உள்ளது. அப்போது மக்களிடம் பண்டமாற்று முறை இருந்து வந்தது. வசதிபடைத்தவர்கள்தான் நாணயங்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு வெள்ளிகாசு கொடுத்தால் 10 யானை அல்லது 50 குதிரை வாங்கலாம் என கூறப்படுகிறது. அப்போதைய நாணயம் முதல் இப்போது நடப்பில் உள்ள நாணயம் வரை என்னிடம் உள்ளது. கிருஷ்ணதேவராயர், பாபர், அக்பர், ஜகாங்கீர், ஒளரங்கசீப் உள்ளிட்ட மான்னர்காலத்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளன. இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்தபோது, புழக்கத்தில் இருந்த ஓட்டை காலணா, அரையணா உள்ளிட்டவை உள்ளன. அலெக்சாண்டர் காலத்து வெள்ளி நாணயம் உள்ளது.
அமெரிக்கா, பிரான்சு, சைனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ரூபாய்கள் உள்ளன.
மன்னர்கள் காலத்து பொருள்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அந்த காலத்தில் பெரும்பாலும் செப்பு பாத்திரங்களே உள்ளன. இறைச்சி வைக்கும் பாத்திரம், அக்காலப் பெண்கள் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட பல பொருள்கள் உள்ளன. மரத்தில் அதிக வேலைபாடுடன் கூறிய கிளி, மயில், அரிவாள்மனை போன்ற பல பொருள்கள் உள்ளன. சங்க கால விளக்கு, கல்விளக்கு, மர உண்டியல், பாக்குவெட்டி, சிக்குவாரி, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல பொருள்கள் உள்ளன. மன்னர் காலத்து குத்துவாள், இடுப்புவாள், அரிவாள், ஈட்டி போன்ற பொருள்கள் உள்ளன.
இந்தப் பொருள்களை அமெரிக்கா, கனடா, பிரான்சு ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல்துறை மற்றும் இந்திய தொல்லியல்துறையினர் பார்வையிட்டுள்ளனர்.ஜெர்மனியில் அச்சிட்ட, பரமசிவன், கிருஷ்ணன்-ராதை ஆகிய படங்கள் மூலிகை மையினால் அச்சிடப்பட்டுள்ளதால் இன்றும் புதிதுபோல உள்ளது.
எனக்கு பள்ளியில் படிக்கும்போதே வரலாறு குறித்த ஆர்வம் ஏற்பட்டது. எனவே நானும் கடந்த 40 ஆண்டுகளாக பல பொருள்களைச் சேகரித்துள்ளேன். வரும் காலத்தில் எனது பிள்ளைகள் இவற்றைப் பாதுகாப்பார்கள்'' என்றார் ராஜராஜன்.