சமந்தா தற்போது வீட்டிலேயே, கீரைத் தோட்டம் போட்டு, அதில் அறுவடையும் செய்துள்ளார். இதற்கான ஐடியாவை, அவரே ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அத்துடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
"யாதுமாகி நின்றாய்' என்ற பெயரில் சொந்தப் படம் ஒன்றைத் தயாரித்து அதில் நடித்துள்ளார் காயத்ரி ரகுராம். இது குழு நடனக் கலைஞர்களின் வாழ்க்கைக் கதை. ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் சென்னை வந்து நடனக் கலைஞராகி போராடும் ஒரு பெண்ணின் கதை. தற்போது இந்தப் படம் ஜி5 தளத்தில் வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது.
"நான் தற்போது மீண்டும் வேலையைத் தொடங்க விரும்புகிறேன். ஆனால் அது அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வைரஸ் தொற்று இங்கு ஒரு காரணமாகத்தான் வந்திருக்கிறதா? அல்லது யாரோ வேண்டுமென்றே அதைப் பரப்பினார்களா? தெரியவில்லை. ஆனால் இதிலிருந்து நாம் மீண்டு வர என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ?' படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் "பிக் பாஸ்' புகழ் ரைசா இப்படி கோபமாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
""எனக்கு "பேட்ட' பட வாய்ப்பு வந்தபோது பலரும் அதில் நடிக்க வேண்டாம் என்றார்கள். அது மிகச் சிறிய ரோல் என்பதுதான் காரணம். அப்போது நான் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் எனக் கூறி அந்த வாய்ப்பை நிராகரித்திருந்தால் ஓர் அழகான படத்தை நான் இழந்திருப்பேன். "மாஸ்டர்' மாதிரியான ஒரு மாஸ் படத்தை இழந்திருப்பேன்'' என்கிறார் மாளவிகா மோகனன்.
நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த படம் "வாலு'. சிம்பு, ஹன்சிகா நடித்த இப்படத்தை விஜய் சந்தர் இயக்கினார். இப்படத்தைத் தொடர்ந்து சிம்பு - விஜய் சந்தர் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது.
"சிங்கம் 3' படத்துக்குப் பின் அனுஷ்கா தமிழில் நடிக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த படமாக தெலுங்கு படத்தைத் தேர்வு செய்துள்ளார். "பாகமதி' படத்தைத் தயாரித்த நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மகேஷ் எழுதி இயக்குகிறார். பொதுமுடக்கம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்குகிறது.