பேல்பூரி

"" என் பையனுக்கு பத்து வயசாகுது. இன்னமும் ஏதாவது கதை சொன்னாத்தான் தூங்குறான்''""எனக்கு அந்த பிராப்ளமே இல்லை. படின்னு என் பையனிடம் சொன்னவுடனேயே தூங்கிடுவான்''
பேல்பூரி


கண்டது

(திருத்தணி அருகே சுற்றுலாப் பேருந்து ஒன்றின் முகப்பில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

தங்கத் தேர் மாரியம்மா

வி.கண்ணகி செயவேலன், அரக்கோணம்.


(சென்னை திருவொற்றியூரில் ஒரு பெயிண்ட் கடையில்)

காக்கா, கிளி, பெயிண்ட் கிடைக்கும்.

முருகு.செல்வகுமார், சென்னை-19.


(ராமநாதபுரத்தில் லாரி ஒன்றின் முன்புறத்தில்)

சித்தி துணை

மு.நாகூர், சுந்தரமுடையான்.


கேட்டது


(பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் இரு இளைஞர்கள்)

""மாப்ளே... இந்த கரோனா பிரச்னை தீரும் வரை சீனா, இத்தாலி நாட்டுக்கெல்லாம் போயிடாதே''

""நீ கடுப்பை கௌப்பாதே... இந்த பக்கத்துல ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற தூத்துக்குடிக்கு ஒரு இண்டர்வியூவுக்குப் போறதுக்கு பஸ்சுக்கு காசு இல்லாம நானே என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். நீ வேற...''

க.சரவணகுமார், நெல்லை.


(செங்கோட்டை கிருஷ்ணன் கோயில் வாசலில் இரு பெண்கள்)

"" என் பையனுக்கு பத்து வயசாகுது. இன்னமும் ஏதாவது கதை சொன்னாத்தான் தூங்குறான்''
""எனக்கு அந்த பிராப்ளமே இல்லை. படின்னு என் பையனிடம் சொன்னவுடனேயே தூங்கிடுவான்''

மு.உமாமகேஸ்வரி, செங்கோட்டை.

யோசிக்கிறாங்கப்பா!

நிலைமைக்கு மேலே
நினைப்பு வந்தால்
நிம்மதி இருக்காது...
அளவுக்கு மேலே
ஆசை வந்தால்
எதுவும் நிலைக்காது.

எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.


மைக்ரோ கதை


குருவுக்கு குளிர்பானம் எடுத்துச் சென்ற சீடன், அந்தக் கோப்பையைத் தவறவிட்டுவிட்டான். கோப்பை உடைந்து சுக்குநூறாகிவிட்டது. மனம் கலங்கிய சீடன் கோப்பைத் துகள்களை அப்புறப்படுத்தினான். சீடன் கலங்கி நின்றது கண்டு, ""என்ன விஷயம்?'' என்று கேட்டார் குரு.""மனிதர்கள் ஏன் சாகின்றனர்?'' என்று கேட்டான் சீடன். ""அது இயற்கை. பிறந்த உயிர்கள் எல்லாம் இறந்துதான் ஆக வேண்டும். மரணம் தவிர்க்க முடியாதது. எல்லாவற்றுக்கும் அழிவு உண்டு'' என்றார் குரு.

சீடன் மெளனமாக இருந்தான்.

"" எதற்குக் கேட்டாய்?'' - குரு கேட்டார்.

""உங்களுக்குக் குளிர்பானம் கொண்டு வந்த கோப்பை மரணம் அடைந்துவிட்டது'' என்றான் சீடன்.

பே.சண்முகம், செங்கோட்டை.

எஸ்.எம்.எஸ்.


மனைவியின் சுவையான சமையலுக்குக் கிடைத்த கோப்பை...
கணவனின் தொப்பை.

எம்.எஸ்.சென்னை-19.


அப்படீங்களா!

வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு தொல்லை தரும் விஷயம் ஒன்று இருக்கிறது. அது, தேவையில்லாமல் நாய் உரத்த குரலில் குரைப்பது. வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தாலோ, உடல்நிலை சரியில்லாதவர்கள் இருந்தாலோ நாயின் இந்த குரைப்பொலி மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.

அதுவும் நம் வீட்டு நாய் "நியாயமாக' குரைத்தால் கூட பரவாயில்லை. திருடர்களைத் தவிர, வேறு யாரைப் பார்த்தாலும் மிக அதிகமாக குரைக்கும் நாய்களும் இருக்கவே செய்கின்றன. தெருவில் செல்லும் வேறு நாய்களின் நிழல், சிறு அரவம் ஆகியவற்றுக்குக் கூட நம் வீட்டு நாய் குரைத்து ஆர்ப்பாட்டம் செய்கின்றன.

நாயின் இந்த அதிக, தேவையில்லாத குரைப்புகளைத் தடுத்து நிறுத்தும் கருவி ஒன்று உள்ளது. ஆஅதலஆமஈஈவ என்ற அந்தக் கருவியில் உள்ள பட்டனை அழுத்தினால், அதிலிருந்து நாயின் காதுகளுக்கு மட்டுமே கேட்கக் கூடிய அல்ட்ராசோனிக் ஒலி கிளம்பி வரும். எல்இடி வெளிச்சமும் வரும். நாய் உடனே குரைப்பதை நிறுத்திவிடும்.

வேலை முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும்போது, இந்தக் கருவி கையில் இருந்தால், நாய்களின் குரைப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com