திரைக்கதிர்

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்து வரும் படம்  "புஷ்பா'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இம்மாதம் 17-ஆம் தேதி வெளியாகிறது.
திரைக்கதிர்

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்து வரும் படம் "புஷ்பா'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இம்மாதம் 17-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்துள்ள அல்லு அர்ஜுனுக்கு பரிசுப் பெட்டி ஒன்றைப் பரிசாக அனுப்பியுள்ளார் ராஷ்மிகா.

அந்த பெட்டியில் சாக்லேட், ஸ்வீட், சில பரிசு பொருட்கள் இருந்தன. மேலும் ஒரு கடிதமும் இருந்தது. அதில், ""புஷ்பா படம் எனது இதயத்துக்கு நெருக்கமானது. இந்த படம் மூலம் நீங்கள் (அல்லு அர்ஜுன்) எனது சிறந்த நண்பராக கிடைத்துவிட்டீர்கள். நல்ல நண்பருக்கு ஒரு சிறு பரிசு' என ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசு பெட்டிக்காக ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளத்தில் அல்லு அர்ஜுன் நன்றி கூறியுள்ளார். இப்பட பாடல்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

----------------------------------------------------

"அதர்மம்', "பகைவன்' ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ்கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் அமீர். இது குறித்து அவர் பேசும் போது..."" எனது திரைப்பயணத்தின் அடுத்த முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். எனது, அமீர் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும் - ஜே எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்ற புதிய திரைப்படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளன.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

என்னுடன் ஆர்யாவின் தம்பி -சத்யா, சஞ்சிதா ஷெட்டி , வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

"மௌனம் பேசியதே', "ராம்', "பருத்திவீரன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தின் ஒளிப்பதிவை ராம்ஜி செய்கிறார் என்றார் அமீர்.

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அமீர், யுவன் ஷங்கர் ராஜா, ராம்ஜி, சினேகன் ஆகியோரின் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
 

----------------------------------------------------

வட இந்தியாவில் லாரிகளைத் திட்டமிட்டு ஒரு கும்பல் திருடிக் கொண்டு போகும் குற்றங்கள் நடைபெற்று வந்தன. பல்வேறு சவால்கள், சிரமங்களுக்கிடையே இதைக் காவல்துறை கண்டுபிடித்தது பரபரப்பூட்டியது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "கபளீகரம்'. மகிழ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தக்ஷன் விஜய் நாயகனாக நடித்து இயக்குகிறார். மைம் கோபி, யோகிராம் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கதை கிருஷ்ணகிரியிலிருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் நடப்பதால் பெரும் பகுதி படப்பிடிப்பு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

""சில உண்மைச் சம்பவங்கள் கற்பனையை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இப்படிப்பட்ட லாரி திருடும் கும்பல் கொல்கத்தாவில் சிக்கியது. இந்தக் கும்பல் லாரிகளைத் திருடும் போது லாரி ஓட்டி வந்த ஓட்டுநரையும் உடனிருக்கும் கிளீனரையும் கொலை செய்து எரித்து அடையாளம் தெரியாமல் ஆக்கி விடுவார்கள்.

எந்தத் தடயமும் இருக்காது அவர்களின் செயல்களைப் பார்த்த போலீசார் அது கற்பனையையே மிஞ்சுவதாக இருந்ததாக வியந்துள்ளனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது'' என்றார் இயக்குநர்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 

----------------------------------------------------


5656 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "வாஸ்கோடகாமா'. கதை , திரைக்கதை, எழுதி இப்படத்தை ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன் , கே.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது... ""குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதை சொல்லும் படம்தான் "வாஸ்கோடகாமா' என்றார். இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை என்.வி. அருண். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் படப்
பிடிப்பு நடைபெற்று வருகிறது.

----------------------------------------------------

சாய்பல்லவியின் தங்கை பூஜா நடித்துள்ள "சித்திரைச் செவ்வானம்' படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. இதையொட்டி தங்கையை வாழ்த்தி சாய்பல்லவி தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு... "ரசிகர்கள் அனைவரும் "சித்திரை செவ்வானம்' படத்தைப் பார்த்து உங்கள் அன்பை அவளுக்கு வழங்க வேண்டும்.

மேலும், ஒரு கேரக்டரில் நடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட பார்வையாளர்கள் பொழியும் அன்பு, அதிக போதையைக் கொடுக்கும். அதைப் பெறுவதற்கு ஒவ்வொரு சூழலிலும் உன்னை ஒரு சிறந்த நபராக வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் உன்னை நேசிக்கிறேன். நான் உன்னை எப்போதும் பாதுகாப்பேன்'- இவ்வாறு சாய்பல்லவி எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com